தன்னை சட்டசபையிலிருந்து 10 நாள் சஸ்பெண்ட் செய்து விட்டதால் தொகுதிப் பணிகளைக் கவனிக்க முடியவில்லை. எனவே இந்த தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி சட்டசபை சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டசபையில் கையை நீட்டி ஆவேசமாகப் பேசியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தை 10 நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அவையின் உரிமை மீறல் குழுவின் விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை எதிர்த்து தற்போது விஜயகாந்த் வழக்குப் போட்டுள்ளார். விஜயகாந்த் தாக்கல் செய்துள்ள வழக்கு:
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 1ந் தேதி விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்டு, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.யான சந்திரகுமார் பேசிக்கொண்டிருந்தார்.
அவரது பேச்சில், முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு சில கருத்துகளை கூறினார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் நான் எழுந்து பேசினேன். எனது பேச்சு தொடர்பாக என்மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவையின் அன்று நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக உரிமை மீறல் விசாரணைக்குழுவுக்கு அனுப்பி வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அப்படி அனுப்பப்பட்ட 24 மணி நேரத்துக்குள், அதாவது மறுநாளிலேயே சட்டசபையில் உரிமைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ.க்களுக்கு அந்த அறிக்கையின் நகல் அளிக்கப்படவில்லை. மேலும், அந்த பிரச்சினையில் அவையில் விவாதம் நடத்தப்படவும் இல்லை. ஆனால் குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, அதன் மூலம் என்னை அவையிலிருந்து 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து அவையில் இருந்து எங்கள் கட்சியுடன் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து மற்றும் எம்.எல்.ஏ. என்ற தகுதியில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்து சலுகைகளும் திரும்ப பெறப்பட்டு விட்டன.
கடந்த கூட்டத்தொடரில், 2 ந் தேதியன்று தொடங்கி 4 ந் தேதி முடிவடைந்த நிலையில், எனது சஸ்பெண்ட் காலத்தில் 3 நாட்கள் முடிந்துவிட்டன. அடுத்து நடைபெறும் கூட்டத்தொடரில் இன்னும் 7 நாட்களுக்கு இந்த சஸ்பெண்ட் காலம் கழிக்கப்படும். ஆனால் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை.
தற்போதுள்ள உத்தரவின்படி, எனக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவு தொடர்வதால் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியவில்லை.
எனது பணியை தடுப்பது அரசியல் சட்டவிதிகளுக்கு முரணானது. சட்டசபையில் பேச்சுரிமைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையை பயன்படுத்தி, எம்.எல்.ஏ. ஒருவரின் உரிமையை ஆளும்கட்சி மறுக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் கோர்ட் தலையிட வேண்டும்.
சட்டசபையில் இருந்து என்னை சஸ்பெண்ட் செய்து 2 ந்தேதி அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். அதை சட்டவிரோதம் என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், மார்ச் 2ம் தேதிக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கையும் அன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
No comments
Post a Comment