இது குறித்து நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள புங்குடு தீவில் பிழைப்புக்கு வழியின்றி, பட்டினி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணம் கடற்கரையில் அகதிகளாக நேற்று (06 -01 -2012) வந்த ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கை.
ஒரு வயது குழந்தை உட்பட 3 சிறுமிகளுடன் வந்திருங்கிய 2 குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும், அறந்தாங்கி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வெவ்வேறு சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியை கேட்ட போது நெஞ்சம் பதறுகின்றது.
சிறு பிள்ளைகளுடன் உயிர் பிழைக்க தமிழகத்திற்கு வந்தவர்களை கடவுச்சீட்டு இல்லாமல் வந்த குற்றவாளிகள் என்று கூறி நீதிமன்றத்தில் நிறுத்திய தமிழக காவல் துறையின் நடவடிக்கை நாகரீகம் அற்றது, இரக்கமற்றது. பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனங்களுக்கும் எதிரானது. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கையில் இன்றளவும் சிங்கள இனவெறி அரசின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடக் கூடத் தெம்பின்றி, சர்வதேசம் தலையிடாத காரணத்தினால் மெளன வலியுடன் எல்லா அடக்குமுறைகளையும் சகித்துக் கொண்டு நம் சொந்தங்கள் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சாப்பிட்டிற்கே வழியற்ற நிலையில், பாதுகாப்பி்ற்காகவும், பிழைக்க வழி தேடியும் தங்களின் இன்னொரு தாய் மண்ணான தமிழகத்திற்கு அகதிகளாக வருவது கூட குற்றமா?
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உண்மையை அறிந்த பிறகும், அவர்களை ஏதாவது ஒரு அகதிகள் முகாமிற்கு கொண்டு சென்று மனிதாபிமான உதவிகளைச் செய்யாமல், நீதிமன்றத்தில் நிறுத்தி, குடும்பத்தினரைப் பிரித்து சிறையில் அடைக்கிறது தமிழக காவல்துறை. இதனமூலம் அகதிகளை கையாளும் பன்னாட்டுப் பிரகடனங்களை அவமதிக்கின்றது என்றல்லவா பொருள்?
இலங்கையில் தமிழர்கள் முழு உரிமைகளையும் பெறும் வரை தமிழக அரசு ஓயாது என்று தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் உறுதிபடக் கூறினார். ஆனால் அவருக்குக் கீழ் இயங்கும் காவல் துறை, உரிமையற்று, வாழ வழியற்று தாய் தமிழத்திற்கு அகதிகளாக வரும் நம் சொந்தங்களை மனிதாபிமானமற்று நடத்துகின்றது, சிறையில் அடைக்கிறது. இது என்ன முரண்பாடு?
இது தமிழகத்தின் காவல் துறைதானா அல்லது இலங்கை அரசின் காவல் துறையா என்ற ஐயம் எழுகின்றது. தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் நாட்டில் தனது உயிருக்கும், உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று கருதி, வேறொரு நாட்டிற்கு அடைக்கலம் தேடி வருபவர்கள் அகதிகளாக ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பையும், மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம் வலியுறுத்துகிறது.
கடந்த 1948ம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐ.நா.மனித உரிமைப் பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அந்த பிரகடனத்திற்கு எதிராக, மனிதாபிமானமற்ற வகையில் தமிழக காவல்துறை செயல்ப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் இந்த கொடூரமான, நாகரீகமற்ற நடவடிக்கையை தமிழக அரசு தடுத்தி நிறுத்தி, சிறையில் அடைக்கப்பட்ட நம் சொந்தங்கள் 8 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லை எனில் அவர்களுக்காக போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment