முல்லைத்தீவை அண்டிய கரையோரக் கிராமங்களிலேயே நேற்றிரவு 9 மணியளவில் கடல் நீர் திடீரென குடிமனைகளுக்குள் புகுந்தது.
செம்மலை, கள்ளப்பாடு, அளம்பில், சிலாவத்தை, முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகள், உப்புக்குளம் போன்ற பகுதிகளுக்குள்ளேயே, கடல்நீர் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2004ம் ஆண்டு இதேநாளில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு கடல்நீர் குடிமனைகளுக்குள் பெருக்கெடுத்துப் பாய்ந்ததால், மீண்டும் சுனாமி வந்து விட்டதோ என்று அஞ்சிய மக்கள் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
கடல் பெருக்கெடுத்ததால், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் பலவும் குடிமனைகளுக்குள் இழுத்து வரப்பட்டன.
பல இடங்களில் இரண்டு அடிக்கும் மேலாக கடல்நீர் குடிமனைகளுக்குள் புகுந்துள்ளதாகவும், இன்று அதிகாலை வரை வற்றாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
No comments
Post a Comment