Latest News

December 03, 2011

தற்கொலை செய்த மனைவி உடலுடன் 5 நாட்கள் வாழ்ந்த கணவன் கைது
by admin - 0

சென்னையி்ல் தற்கொலை செய்து இறந்த மனைவியின் உடலுடன் 5 நாட்கள் குழந்தைகளுடன் வாழ்ந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மாதவரத்தை அடுத்த முனுசாமி நகரில் உள்ள 3வது தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி(32). பாலீதின் பையில் பிரிண்டிங் போடும் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மனைவி சரஸ்வதி(30). இவருக்கு லோகேஸ்வரி(8) என்ற மகளும், சதீஷ்(4) என்ற மகனும் உள்ளனர். லோகேஸ்வரியும், சதீஷூம் அதேபகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், குடும்ப வருமானத்துக்காக சரஸ்வதி வீட்டு வேலை செய்து வந்தார். கணவனை குடிப்பழக்கத்தை விடும்படி சரஸ்வதி அடிக்கடி அறிவுறுத்தியதால், 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 28ம் தேதி ஏற்பட்ட தகராறில் சரஸ்வதியை, பார்த்தசாரதி அடித்து உதைத்து உள்ளார். இதில் மனமுடைந்த சரஸ்வதி படுக்கை அறையில் சோலை மூலம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்ததை அறிந்த பார்த்தசாரதி, சரஸ்வதியின் உடலை இறக்கி படுக்கையில் படுக்க வைத்தார். உடலின் மீது துணியினால் மூடிவிட்டு, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று குழந்தைகளிடம் சமாளித்தார்.

தொடர்ந்து 5 நாட்களும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பார்த்தசாரதி பராமரித்துள்ளார். சரஸ்வதியின் வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதில் சந்தேகமடைந்த அக்கப்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த மாதவரம் உதவி கமிஷனர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது பார்த்தசாரதி இறந்த மனைவியின் உடலை 5 நாளாக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

சரஸ்வதியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து 5 நாட்களாக அழுகிய மனைவியின் உடலுடன் கணவர் குழந்தையுடன் இருந்த சம்பவம் மாதவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
« PREV
NEXT »

No comments