Latest News

July 18, 2011

இறந்த பின்னும் 6 பேரை வாழ வைத்த சிறுமி
by admin - 1


திருச்சி அருகே, விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு, அஜீத் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பஸ், கடந்த 15ம் தேதி கிளம்பியது. பஸ்ஸை நெல்லையை சேர்ந்த ராஜன் (32) என்பவர் ஓட்டினார்.திருச்சியை அடுத்த சமயபுரம் பள்ளிவிடை அருகே நள்ளிரவு ஒரு மணியளவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி இடபுறம் சென்றது. எதிரே வந்த, புதுச்சேரியில் இருந்து பழனிக்கு சுற்றுலா சென்ற கார்த்திகேயன் என்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் இரண்டு பஸ்களும் சாலையில் இருந்து, 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தன.விபத்தில், புதுச்சேரியை சேர்ந்த சுபாஷிணி (22), திலீப் பரத் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன ஊழியரான சிங்கார வடிவேலு மகள் சிந்தாமணி (8) உட்பட 37 பேர் படுகாயமடைந்தனர்.திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிந்தாமணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சிங்கார வடிவேலும், அவரது மனைவி மீனாட்சியும் முன்வந்தனர்.

கே.எம்.சி., மருத்துவமனையில் நேற்று காலை 10.30 மணிக்கு, டாக்டர் வேல் அரவிந்த் தலைமையில், டாக்டர்கள் மணிவண்ணன், செந்தில்குமார் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர், சிந்தாமணியின் இரண்டு கண்கள், சிறுநீரகம், இதயம், கணையத்தை அறுவை சிகிச்சை மூலம் உடலிருந்து பிரித்தெடுத்தனர்.பாதுகாப்பான முறையில் சென்னை, திருச்சி, மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சிறுமி சிந்தாமணி மூளைச்சாவு அடைந்தாலும், உடல் உறுப்பு தானம் மூலம் ஆறு பேரை வாழ வைத்து, அவர்கள் மூலம் உயிர் வாழ்ந்து வருகிறார்

« PREV
NEXT »

1 comment

Yazhini said...

அனைவரும் இது போல உறுப்பு தானம் கொடுக்க முன் வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். சிந்தாமணியின் பெற்றோர் வாழ்க !