www.vivasayi.tk |
சத்ய சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்பட்டு ஒரு நாள் முடிவதற்குள் அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. உண்மையில் அவர் இறந்தது ஏப்ரல் 24 ம் திகதி தானா அல்லது அதற்கும் முன்பாகவா என்ற சந்தேகத்தை ஊடகங்கள் கிளற ஆரம்பித்துள்ளன.
காரணம் சத்யசாய் அறக்கட்டளை சார்பில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பே அதிக விலைக்கு ஒரு சவப்பெட்டிக்கு ஓர்டர் கொடுத்து வாங்கியது தான். அறக்கட்டளையின் சக்தி வாய்ந்த மற்ற உறுப்பினர்களுக்குக் கூட தெரியாமல் இந்த செயலை செய்துள்ளனர் பாபாவின் உறவினர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 28 ம் திகதி சாய்பாபா உடல்நிலை மோசமடைந்து சாய்பாபா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அவரது நிலை குறித்த முழுமையான தகவல்கள் வரவில்லை. உடல்நிலை கவலைக்கிடம் என்று மட்டும் கூறி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ம் திகதியே சவப்பெட்டிக்கு ஓர்டர் கொடுத்துள்ளது சாய்பாபா அறக்கட்டளை. பெங்களூருவில் உள்ள "குமார் அண்ட் கோ இன்டர்நேஷனல்" என்ற கோவையைச் சேர்ந்த தமிழருக்குச் சொந்தமான சவப்பெட்டி நிறுவனத்தில் தான் இந்த ஓர்டர் தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1.07 லட்சம் ஆகும்.
ரூ 57,000 முன் தொகை கொடுத்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ராஜேந்திர ரெட்டி என்பவர் இந்தப் பெட்டியை வாங்கி, அல்சூருக்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து அந்தப் பெட்டி புட்டபர்த்திக்குச் சென்றுள்ளது. இத்தகவல்களை சவப்பெட்டி தயாரித்த நிறுவனத்தின் ஊழியர் விஸ்வநாத் விவரமாக ஊடகங்களிடம் தெரிவித்துவிட்டார்.
நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமி கூறுகையில், "பாபாவுக்காகத்தான் அந்தப் பெட்டியைச் செய்தோம் என்று எங்களுக்கு அப்போது தெரியாது. ஆனால் சாய்பாபா உடல் கிடத்தப்பட்ட அந்தப் பெட்டியை தொலைக்காட்சியில் பார்த்ததும் உடனே புரிந்து கொண்டோம், அது எங்களுடைய தயாரிப்பு தான் என்பதை. எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது" என்றார்.
சாய்பாபா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் தான் இந்தப் பெட்டியை வாங்கினர் என்பதும் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பெட்டிக்கு ஓர்டர் கொடுத்த ராஜேந்திரநாத் ரெட்டியைத் தொடர்பு கொண்டு அந்நிறுவன ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, "உண்மை தான்.
ஆனால் இதுபற்றி வெளியில் யாருடனும் பேசாதீர்கள்" என்று எச்சரித்தாராம். அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான நாகானந்தைக் கேட்டபோது, "இந்தப் பெட்டிக்கு ஓர்டர் கொடுத்தது சாய்பாபா உறவினர்கள் தான்" என்றார்.
மற்றொரு உறுப்பினரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி கூறுகையில், "இந்தப் பெட்டிக்கு எப்போது ஓர்டர் கொடுத்தனர் என்ற விவரமே எங்களுக்குத் தெரியாதே" என்றார் அதிர்ச்சியுடன். அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் ஜனார்தன் ரெட்டியும் தனக்கு எதுவும் தெரியவில்லை என்றார். பாபாவின் உடல்நிலை கவலக்கிடமாக உள்ளதாக தகவல் கொடுத்தது ஜனார்தன் ரெட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment