Latest News

February 17, 2017

லெப்.கேணல் தவம் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
by admin - 0

லெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்ளை முகுந்தன்) திரியாய், திருமலை.
பிறப்பு 08.04.1966 -வீரச்சாவு 17. 02.2008
லெப்.கேணல் தவம் தவா

லெப்.கேணல் தவம் உழைப்பையே உயிராக்கி மலையானவன மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன் எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது.

தவா தான் இருக்கும்போது தன்னைப்பற்றிச் சொன்னதுமில்லை. இல்லாத போது அவர் பற்றிக் கூறுவோருக்குப் பஞ்சமுமில்லை. அந்தப் பெருங்கடல் பற்றி அவருடன் சேர்ந்து வாழ்ந்த நினைவுகள் பற்றிப் பலரும் என்னிடம் கூறியவற்றைத் தொகுத்து வழங்குகின்றேன். திருமலையின் திரியாயில் நாராயணபிள்ளை மண இணையர்கட்கு 1966 இல் இரண்டாவது மகனாக முகுந்தன் பிறந்தபோது அந்தக் குடும்பம் நல்ல நிலையில் இருந்தது. தகப்பன் கிராமசேவையாளர் உத்தியோகத்தையும் தாய் ஆசிரியத் தொழிலையும் செய்தனர். முகுந்தனுக்கு ஒரு தமையனும் இரண்டு தங்கைகளும் உள்ளனர்.

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்விகற்ற நாட்களில் விளையாட்டுக்களில் அவனுக்கு நல்ல ஆர்வம். பாடசாலை மட்டம், கோட்ட மட்டம் என்று பல பரிசில்களையும் தட்டிச் சென்றிருக்கிறான். சிறந்த தடகள வீரனாகவும் (கிறிக்கற்) துடுப்பாட்ட வீரனாகவும் திகழ்ந்தான். க.பொ.த. சாதாரண தரம் முடித்து உயர் தரத்தில் வர்த்தகத்தைத் தெரிவுசெய்து கற்ற முகுந்தனுக்குக் கல்வியைவிடத் தேசமே பெரிதாகத் தெரிந்தது. சிங்கள இனவாதத்தின் முதற்பொறியாக இருந்தது திருமலை. அங்கு சிங்களக் குடியேற்றங்களும் பெருகத்தொடங்க தமிழர் விடுதலைக்கான பயணமும் தீவிரம் பெற்றது. லெப்.கேணல் புலேந்தி அம்மான் திருமலைக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட காலத்தில் 1985.06.08 அன்று தனது வீடு குறித்த பற்றுக்களைத் தள்ளி விட்டுத் தேசத்திற்காகப் பயணமானான் முகுந்தன்.

திருமலை - 02 பயிற்சி முகாமில் புலேந்தி அம்மானிடம் பயிற்சி பெற்றதன் பின்பு அவனது பெயர் தவம், தவம் பேச்சு வழக்கில் தவா ஆகி நிலைத்துப் போனது. தவா இயக்கத்தில் இணைந்து கொண்ட அதே ஆண்டு 8ம் மாதம் 10ஆம் நாள் பன்குளம் திரியாய் வீதியில் இருந்த கஜூத் தோட்டத்தில் தவாவின் தகப்பன் உட்பட 16பேரைச் சிங்களப் படைகள் சுட்டுக்கொன்றனர். ஏற்கனவே கிராமசேவையாளராக அரச சேவை செய்த அவரைச் சிங்களம் கட்டாயம் கற்றுத் தெரிவாக வேண்டும் என்ற சட்டம் பாதிப்புக்குள்ளாக்கியது. அவரது அரசசேவையைப் பறித்தது. தொடர்ந்து தீவிரம் பெற்ற அரச பயங்கரவாதம் அவரது உயிருக்கு உலைவைத்தது. தவாவுக்கு அதுவாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

அந்த வலியைச் சுமந்து கொண்டே அவர் விடுதலைக்காகப் பயணித்தார். திருமலைத் தாக்குதலணி வடக்கு நோக்கிப் புறப்பட்டது. அப்போது அவருக்கு அகவை பத்தொன்பது. 1986ல் யாழ்ப்பாணம் சென்ற தவா, அல்பேட் வீட்டில் ஒருவனாகினான். கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாகச் செயற்பட்ட காலம் அது. மதன் வீடு, குப்புவீடு, நம்பர் -3, மெயின் போன்ற நிலையங்களில் ஒன்றான உரும்பிராய், நீர்வேலிப் பகுதியில் அமைந்திருந்த அல்பேட் வீடு சற்றுமாறுபட்டது. அங்குதான் ஆயுதக்களஞ்சியம் , ஆயுதப்பராமரிப்பு, குப்பி அடைத்தல், சக்கைஅடைத்தல் போன்ற வேலைகள் மறைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. தவா அந்தப்பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார்.

ஆயுதம் பற்றியும் வெடிமருந்து பற்றியும் தேவையான அறிவைப் பெற்றிருந்தார். அதுதான் பிற்காலத்தில் திரைப்படத் தயாரிப்புக்களில் அவரை ஒரு வெடிபொருள் நெறியாளராக உருவாக்கிவிட்டது. அந்தக் காலத்தில் ஒரு முகாமின் சகல வேலைகளையும் போராளிகளே மாறி மாறிச் செய்வார்கள். சமையல், துப்பரவு, ஆயுதப் பராமரிப்பு, அன்றாடப் பதிவு என்று இன்றைய நாட்களைவிட எல்லாமே மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. லெப்.கேணல் ஜொனியே இவற்றையெல்லாம் சரிபார்ப்பார். சமையலில் இருந்து சகலவற்றையும் தவாவும் செய்தார். 21.12.1985 அன்று சுதுமலையில் அமைந்திருந்த கேணல் கிட்டுவின் மையத்தளத்தை அழிப்பதற்காகச் சிங்களப் படைகள் மூன்று பெல் வகை உலங்கு வானூர்திகளோடு சுற்றிவளைப்பைச் செய்தன.

அதை முறியடிக்க அல்பேட் முகாமில் இருந்து போராளிகள் சென்றனர். சண்டை முறியடிக்கப்பட்டது. ஆனால் இவர்களின் அணிக்குத் தலைமையேற்றுச் சென்ற மேஜர் அல்பேட் தவாவிற்கு அருகிலே வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இந்தச் சண்டையில் தவா மிகவும் திறமையாகச் செயற்பட்டமைக்காகக் கேணல் கிட்டு உட்பட அனைவராலும் பாராட்டப்பட்டார். அதன் பிறகு 1986 இல் வசாவிளான் பகுதிக் காவல்நிலைகளில் காவலில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற சண்டை ஒன்றில் கையில் சிறு விழுப்புண் இவருக்கு ஏற்பட்டது. இதே ஆண்டு காங்கேசன்துறையில் இருந்த சிங்களப் படைகள் தெல்லிப்பழை ஊடாகப் பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கின.

படையினரை வழிமறித்து நடாத்தப்பட்ட சண்டையிலும் தவா பங்கேற்றார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காகத் தவா தமிழகம் சென்றார். அங்கு மூன்று முறை மூல நோய்க்கான அறுவைச் சிகிச்சை இவருக்குச் செய்யப்பட்டது. 1987 இல் அங்கிருந்து திரும்பவும் நாட்டுக்கு வந்த பின்பு புலேந்தி அம்மான் மீண்டும் தவாவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார். மீண்டும் திருமலைத் தாக்குதல் அணியில் இணைந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிப் பணியாற்றிய தவா 1987 இல் மீண்டும் புலேந்தி அம்மானுடன் யாழ் நோக்கிச் செல்கின்றார். 1987 பெப்ரவரி மாதம் கேணல் கிட்டுவின் ஆக்கப்படி நிதர்சனம் நிறுவனம் தொடங்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக ஒளிபரப்புச் சேவையும் தொடங்கப்படுகின்றது.

தெல்லிப்பழை, புத்தூர், கொக்குவில், வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் ஒளிபரப்பு மையங்கள் செயற்படுகின்றன. 1987 காலப்பகுதியில் பரதன் அவர்கள் நிதர்சனத்திற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்டபோது தவா நிதர்சனத்தோடு இணைந்து கொள்கின்றார். நிதர்சனத்தின் மூத்த போராளிகளில் ஒருவரான கப்டன் தீப் தவாவின் ஊர்க்காரர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து படப்பிப்புக்களில் ஈடுபடுவார்கள். படப்பிடிப்பில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார். பின்னாட்களில் ஒரு ஒளிப்பதிவு வல்லுனராகவே அவர் செயற்பட்டார். தியாகி திலீபனின் உண்ணாநோன்புக் காலத்தில் கப்டன் தீப்புடன் இணைந்து அந்த வரலாற்று நிகழ்வை படப்பிடிப்புச் செய்தார். அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாகியது.

தன்னை வளர்த்த புலேந்தி அம்மானின் இழப்பு தவாவுக்குள் நெருப்பாய் கனன்றது. தொடர்ந்து இந்திய-புலிகள் போர் வெடிக்கின்றது. அந்த நேரம் இந்தியப் படைகளால் ஊடகங்களே முதலில் முடக்கப்படுகின்றன. நிதர்சனமும் தனது உடைமைகளோடு தன்னை உருமறைத்தபடி இந்தியப் படைகளுக்கு எதிராக ஊடகப் போரைத் தொடக்கியது. தென்மராட்சி மீசாலையில் "எம்.ஜி .ஆர். வீடியோ சென்ரர்" என்ற பெயரில் கப்டன் தீப், தவா, பரதன், புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் ஒளிக்கலையகம் ஒன்றை அமைத்து அதன் மறைவில் வேலைகளைத் தொடர்ந்தனர். பழைய ஆவணங்களைப் பாதுகாப்பது, புதிய விவரணம் ஒன்றைத் தயாரிப்பதற்கான படப்பிடிப்புக்களில் ஈடுபடுவது இவர்களுடைய வேலை.

இந்தியப்படைகளுக்கு முதலில் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் ஐயப்பாடு இல்லை. கப்டன் தீப், தவா போன்றோர் இந்தியப் படைகளின் நகர்வுகளை மறைமுகமாக இருந்து படம் பிடித்தனர். இந்தியப் படைகள் செய்த படுகொலைகள் பற்றி மக்களிடம் பேட்டிகளை பதிவு செய்தனர். இவர்களது பணிகள் இந்தியப் படைகளின் சந்தேகத்திற்கு இடமாகவே ஆவணங்களை தகுந்தமுறையில் மறைத்துவிட்டு வன்னிநோக்கிப் பயணமாகின்றனர்."பப்பா அல்பா" என்ற சங்கேதப் பெயருடைய வன்னிக் கானகமுகாம் ஒன்றில்வைத்து நிதர்சனத்தின் பணிகள் தொடர்கின்றன. ஒரு சிறிய கலையகத்தை அமைத்து ஒலிப்பதிவு, படத்தொகுப்பு வேலைகள் தொடங்குகின்றன.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிளும் பேட்டிகளும் சேர்க்கப்பட்டு விவரணம் ஒன்று தயாராகின்றது. "இந்திய அரச பயங்கரவாதம் - பாகம் 1, பாகம் 02" என்ற பெயருடைய விவரணம்தான் உலகிற்கு முதன் முதலில் இந்தியப் படைகள் ஈழத்தில் செய்தது என்ன என்பதை தெளிவாக்குகின்றது. இந்த விவரணத் தயாரிப்புக்களை தவா, தீப் ஆகியோர் காட்டுக்குள் இருந்து வெளிவந்து மக்கள் மத்தியில் உள்ள வீடியோக் கடைக்காரர்களை அணுகி சமூக நிகழ்வுகளை படம் பிடிக்கும்போது இந்தியப்படைகளின் காட்சிகளையும் படம்பிடித்துத் தருமாறு கேட்டு அக்காட்சிகளைப் பெற்று விவரணத்தில் இணைத்தனர்.

அந்தச் சந்தர்ப்பம்தான் வன்னி எங்கிலும் வீடியோக் கடைக்காரர்களையும் மக்களையும் தவாவிடம் நெருங்கவைத்தது. தவாவிற்குத் தெரியாத வீடியோ. நிழற்படக் கடைக்காரர்கள் இல்லை என்னும் அளவிற்கு அந்த உறவு வலுப்பட்டது. தவாவிற்குத் தெரியாத ஊர்களும் இல்லை. அவரை அறியாத மக்களும் இல்லை. "கானகத்தில் ஒரு நாள்" சிலநூற்றுக்கணக்கான போராளிகளின் காட்டுவாழ்க்கை பற்றிய செய்திகளை எடுத்துக் காட்டிய படம். தவாதான் இதற்கும் படப்பிடிப்பு. இந்தக்காலத்தில்தான் ஒட்டுசுட்டான் கோயில் திருவிழாவில் ஒரு அருமையான பாடகரை ஒரு வீடியோ ஒளிநாடா மூலம் தவா இனம் கண்டார்.

உடனே புதுவை அண்ணரிடம் உங்களுக்கேற்ற பாடகர் ஒருவர் இருக்கிறார் எனச்சொல்லி வைத்தார். இந்தியப் படைகள் புறப்பட்ட கையோடு கண்ணாடிச் சந்திரனும் தவாவும் சென்று அந்தப் பாடகரிடம் தொடர்புபட்டு கலை, பண்பாட்டுக் கழகத்துடன் இணைக்கின்றனர். அவர் பாடகர் சாந்தனாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமாகக் காரணமானதும் தவாதான். இந்தியப் படைகள் தமிழீழத்தில் இருந்து தோல்வியுடன் புறப்பட புலிகள் கானகத்தில் இருந்து வெளிவருகின்றனர். அந்தக் காலப்பகுதியில் தேனிசை செல்லப்பா குழுவினர் தமிழகத்தில் இருந்து ஈழம் வருகின்றனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இருந்த கவின் கலைக் கல்லூரியில் இருந்து தவா உட்பட பல போராளிகள் தேனிசை செல்லப்பா குழுவினரோடு புறப்படுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அம்பாறை வரை 21 இடங்களில் தேனிசை செல்லப்பாவின் தாயகப்பாடல்கள் மேடை நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன. அந்த நிகழ்ச்சிக்கான மேடையமைப்பு ஒளியமைப்பு, படப்பிடிப்பு, உணவு உபசரிப்பு, பாதுகாப்பு உட்படப் பலவேலைகளின் பின்னணியாகத் தவா உள்ளிட்ட ஒருசிலர்தான் பணியாற்றினார்கள். இன்னவேலையென்றில்லாமல் எல்லாவற்றையுமே இழுத்துப் போட்டுக் கொண்டு இடைவெளி நிரப்பி, ஆளில்லை என்று திக்கு முக்காடும் நேரங்களில் அந்த இடைவெளிகளை நிரப்பி, கடின உழைப்பின் போதும் கலகலப்போடு உலவி தவா இந்த விடுதலைப் பயணத்தோடு இரண்டறக் கலந்திருந்தார்.

தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி திரியாயில் நடந்த போதுதான் தவாவின் தாயார் தவாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண்கிறார். அதுவரை இது தனது சொந்த ஊரென்று தவா மூச்சுக்கூட விடவில்லை. தாயைக் கண்ட நிறைவோடு அவரது பயணம் தொடங்குகின்றது. 1990 இற்குப் பிறகு சிங்களப் படைகளின் வல்வளைப்பு தவாவின் உறவுகளை ஊரைவிட்டே ஏதிலிகளாக்கி அனுப்புகின்றது. 1990-1991 வரை தவா கலை, பண்பாட்டுக் கழகப் பணிகளோடு இணைந்திருந்தார். அக்காலத்தில் "இந்த மண் எங்களின் சொந்த மண்" , "வேங்கைகளின் விடுதலை வேதம்" "யாகராகம்," "நெய்தல்" உட்பட ஆறு பாடல் ஒலிநாடாக்கள் தமிழோசை கலையகத்தால் கலைபண்பாட்டுக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.

இந்தப் பாடல் ஒலி நாடக்களின் தயாரிப்பில் பல்வேறுபட்ட வேலைகளோடு தவா இணைந்திருந்தார். அப்போது கலை, பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் பத்து நாட்கள் முத்தமிழ்விழா நடத்தப்பட்டது. அதன் சிறப்பான ஆற்றுகைக்கும் தவாவினது உழைப்பு பலம் சேர்த்தது. மின் பிறப்பாக்கியிலிருந்து மேடைகட்டுதல், கலைஞர்களை ஏற்றியிறக்குதல், மக்கள் தொடர்பு, வரவேற்பு என்று தவா அனைத்து வேலைகளின் முதுகெலும்பாக நின்றார். கலை, பண்பாட்டுக் கழகத்துடனான அவரது தொடர்பு வெளிச்சம் இதழின் நூறாவது இதழ் வெளியீட்டு விழாவரை தொடர்ந்தது. எந்தப் பணி என்றாலும் களமுனைப் படப்பிடிப்புக்களைச் செய்ய அவர் தவறவேயில்லை. 1990 களில் நடந்த பல சண்டைகளுக்குத் தவாதான் படப்பிடிப்பு.

கோட்டை, மாங்குளம், கொக்காவில் போன்றவை மிகமுக்கியமானவை. 1991 இன் பின்னர் நிதர்சனத்தோடு மீண்டும் இணைந்த தவா வன்னிப்பகுதிப் படப்பிடிப்புக்குப் பொறுப்பாகத் தனது பணியைத் தொடர்ந்தார். வன்னியில் தொடக்கத்தில் தவாவுக்கென்றொரு முகாம் இருந்ததில்லை ஆனால் தவாவைத் தெரியாத வீடுகளே இல்லை. சொந்த ஊர்ப் போராளிகளுக்கே தெரியாத இடங்கள் தவாவிற்கு நன்கு அறிமுகமாகியிருந்தன. வன்னி வாழ்க்கையில் மக்களின் எழுச்சி நிகழ்வுகள், குண்டு வீச்சுக்கள். போராளிகளின் பயிற்சி முகாம் படப்பிடிப்புக்கள், அடையாள அட்டைப் படம் எடுத்தல், விளையாட்டுக்கள் என்று அனைத்தையுமே தவா படம்பிடித்தார். காலப் போக்கில் அவருக்குதவியாக பல புதிய போராளிகள் வந்திணைய அவர்களையும் பயிற்றுவித்தார்.

வன்னியில் இருந்த காலத்தில்தான் கரும்புலி போர்க் உடனான நட்பு இவருக்குக் கிடைக்கின்றது. போர்க் கொண்டுசென்ற வெடிக்கும் ஊர்திக்குரிய பயிற்சி ஒத்திகை நடக்கின்றது. தவாவும் படப்பிடிப்புச் செய்தபடி அருகில்நிற்கிறார். மாங்குளம் முகாம் மீதான தாக்குதலில் போர்க் வெடிக்கப்போகும் நேரத்திற்குச் சற்று முன்னர் போர்க்குடன் அமர்ந்திருந்து ஒன்றாகப் பகிடிவிட்டு, ஒன்றாகச் சாப்பிட்டு, அவர் போய் வெடித்த பிறகு அந்தத் தாக்குதலின் பதிவுகளைச் செய்து, விமானக் குண்டுவீச்சுக்களில் மாட்டுப்பட்டுத் தப்பிவந்து, வீரச்சாவுகளுக்குச் சென்று என்று ஓடியோடி உழைத்தார்.

மாங்குளம் சண்டைமுடிய அத்தாக்குதலின் வரைபடத்தையும் சிலமுக்கிய குறிப்புக்களையும் அன்றிரவே யாழ்ப்பாணத்திலமைந்திருந்த தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என்றகட்டளை கிடைக்கிறது. கூடநின்ற தவாவின் தோழன் நாளை விடியக் கொண்டுசெல்வோம் என்று கூறுகின்றார். ஏற்கனவே மூன்று நாட்கள் தூக்கமில்லை. ஆனாலும் தவா "இல்லையில்லை இன்றிரவே அனுப்ப வேண்டும்"; எனச்சொல்லி கடின பாதைகளால் உந்துருளியில் சென்று கடல் கடந்து யாழ். சென்று உரிய பணியை நிறைவேற்றினார். அலுப்புச் சலிப்பில்லாமல் பணியாற்ற அவருக்கு நிகர் எவரும் இருந்ததில்லை. யார் எது கேட்டாலும் தவா இல்லை என்று சொன்னதில்லை.

எங்கிருந்தாவது பெற்று உரிய நேரத்திற்கு உரிய பொருளைக் கொடுத்துவிடுவார். யு1, யு5, துஏஊ, ஆளு-1, ஆ-4, ஆ7, ஆ1000, ஆ3000, ஆ450, ஆ9000 என்று பழைய, தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்துக் கமரா வகைகளுமே தவாவுக்கு நன்கு பழக்கம். கமராமீது அவருக்கு அன்பு இருந்தாலும் ஆயுதம் மீதுதான் அவருக்குக் காதல் இருந்தது. குறிபார்த்துச் சுடுவதில் தவா மிகவும் கெட்டிக்காரன். 1987 இல் இருந்து 2006 முகமாலைக்களம் வரை தவா நிற்காத சண்டைக்களங்களே இல்லையெனலாம்.

சண்டைக்களங்களுக்கு கமராவுடன் போகும் தவா பின்னர் துவக்கெடுத்து ஆமிக்குச் சுடுவதும் காயப்பட்டவர்களைத் தூக்குவதுமாக மாறிவிடுவார். இப்படித்தான் முல்லைத்தீவுச் சண்டையில் நிற்கும்போது தவாவுக்கு நன்கு அறிமுகமான தவாவிடம் படப்பிடிப்பு பயிற்சிபெற்ற பெண்போராளி சண்டைசெய்து கொண்டிருக்கும்போது தவாவுக்கு முன்னே விழுப்புண்படுகின்றார். தவா அவரைத் தூக்கிக்கொண்டு 750 மீற்றர் தூரம் ஓடிச்சென்று காவு வண்டியில் ஏற்றிவிட்டு வந்தே மீதிப் பணி தொடர்ந்தார். சண்டைப் படப்பிடிப்புச் செய்ய அவருடன் பல போராளிகள் நின்றாலும் சண்டை நடக்கும் போது அவர் முகாமில் நிற்கமாட்டார்.

படப்பிடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவிபுரிய, மின்கலத்துக்கு மின்னேற்றிக் கொடுக்க என்று களமுனைக்கு விரைந்துவிடுவார். இப்படித்தான் முல்லைத்தீவுச் சண்டையில் ஒரு பெண் போராளி படப்பிடிப்புச் செய்து கொண்டிருந்தார். தவாவுக்கு அகவையிலும், அனுபவத்திலும் அவர் மிகவும் சிறியவர். அவரிடம் "தங்கச்சி உந்தக் கமராவைத்தாங்கோ படமெடுத்துப்போட்டுத் தாறன்" என்று தவா கேட்க, தவாவைப் பற்றி அதிகம் தெரியாத அவரோ "நான்தான் இங்க ஒரு கிழமையாக நிண்டு படமெடுக்கிறன். கமராவைத் தரமாட்டன். வேணுமென்றால் நீங்கள் லைற் பிடியுங்கோ நான் படமெடுக்கிறன்" என்று கூறத் தவா அவர் படமெடுத்து அவ்விடம் விட்டு அகலும்வரை லைற்பிடித்து உதவி செய்தார்.

பின்னாட்களில் தவாபற்றி அறிந்து அந்த நிகழ்வுக்காக அந்தப் பெண்போராளி வருந்தியபோதும் தவா சங்கடப்படவேயில்லை. பெரியவராயிருந்தாலும் தவா தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுவதில்லை. அவரவருக்கேற்ற வகையில் தவா தன்னை மாற்றியமைத்துக் கொள்வார். நிதர்சனத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஒளிவீச்சு சஞ்சிகை உருவாக்கத்திற்கான அடித்தளத்தை மாமனிதர் சச்சிதானந்தம் (ஞானதரன்) அவர்களுடன் இணைந்து தவா போட்டிருந்தார். 1993 மேயில் அது தன் முதல் இதழை வெளியிட்டது. அதற்குமுன்னரே தவாவும், திரு.சச்சியும் இணைந்து 91,92 காலப்பகுதியில் அந்த இதழைத் தயாரித்து விட்டனர்.

அந்த இதழின் தொழில்நுட்பத்தில் இருந்த குறைபாடு காரணமாக அது 1993 இலேயே மீண்டும் திருத்தமாகத் தயாரிக்கப்பட்டது. இந்த ஒளிவீச்சு சஞ்சிகை 100 ஐத்தாண்டித் தனது இதழ்களைவெளியிட்டது. அது தொடங்கப்பட்டதிலிருந்து இறுதி இதழ்வரை, அது பின்னர் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாகப் பரிணாம வளர்ச்சியடைந்ததுவரை தவா உடனிருந்து தனது உழைப்பை ஊற்றியிருந்தார். ஒளிவீச்சு தயாரிப்பில் செய்திப்படப்பிடிப்பு மிகமுக்கியமான ஒன்று. வன்னிக்கு எல்லாரும் இடம்பெயர்ந்த பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் நடுவில் கலையகம் இல்லாத இக்கட்டுக்குள் இச்செய்திப் படப்பிடிப்பை செய்வது மிகவும் கடினமாக இருந்தது.

இதன் படப்பிடிப்புக்கு ஒளியமைப்பைச் சரியாகச் செய்வது நாட்கணக்கில் இழுபட்டது. இன்று சரிவராவிட்டால் நாளை, நாளை சரிவராவிடில் மறுநாள் என்று அந்த வேலை நீண்ட போதும் தவாதான் பொறுமையாக இருந்து அந்த ஒளியமைப்புச் சரியாகும் வரை இடத்தை மாற்றி மாற்றி விளக்குகளை அமைத்து அந்தப்பணியை சரியாக்கித் தருவார். ஒளிவீச்சுத் தயாரிப்பின் போதுதான் எழில் தவாவுக்கு அறிமுகமானார். போராளியாகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்த அந்தப் பெண்ணைத் தவாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. 1995 பெப்ரவரி மாதம் தவாவுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பயனாக இரண்டு பிள்ளைகள்.

தவாவைப் போலவே அவரது குடும்பமும், போராளிகளின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தது. தவா நீண்ட நாட்கள் வீடு செல்லாத போதெல்லாம் வீட்டைத் தனியே நிர்வகித்து விடுதலைப் போருக்கு உறுதுணையாயிருந்தார் தவாவின் மனைவி. தொடர்ந்த காலங்களில் தவாவின் மைத்துனர்கள் இருவர் போராடச் சென்று மாவீரரானார்கள். இருபத்து மூன்று வருடகாலப் போராட்ட வாழ்க்கையில் தவா தனது குடும்பத்தோடு ஒன்றாக இருந்த நாட்களை எண்ணிவிடலாம். தான் திருமணம் செய்தவர் என்றோ, தனக்கு குடும்பம் இருக்கிறது என்றோ அவர் நினைத்ததில்லை. இயக்கம் எங்கு போகச் சொல்கிறதோ அங்கு போய் எதைச் செய்யச் சொல்கிறதோ அதைச் செய்து ஒரு செயல்திறனுள்ள முழுமையான போராளியாகவே அவர் இறுதி நாட்கள் வரை வாழ்ந்தார்.

எதிரி விமானங்களின் குண்டு வீச்சுக்கள,; மக்களின் இடர்பாடான இடப்பெயர்வுகள் தவாவைப் பொறுத்தவரை தாங்க முடியாத துயரமான நிகழ்வுகள். நவாலி சென். பீற்றேர்ஸ் தேவாலயப் படுகொலையின் போதும், யாழ. வலிகாம இடப்பெயர்வின் போதும் கையில் கமராவோடு அவர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அந்த வேளைகளில் படப்பிடிப்பைத் திடீரென்று பிறர் பொறுப்பில் விட்டுவிட்டுத் துன்பப்படும் மக்களுக்கு உதவிபுரியத் தவா போய்விட்டார். நிதர்சனம் நிறவனத்தாலும் திரைப்பட உருவாக்கப் பிரிவாலும் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள், முழுநீளப்படங்கள் அனைத்திலுமே தவாவின் உழைப்பு இருந்தது. தன்னை ஒரு நடிகனாக அவர் என்றும் நினைத்ததேயில்லை.

இந்தப் பாத்திரத்துக்குத் தவாதான் பொருத்தம் என்று இயக்குநர் தீர்மானித்தபோது தவா மறுப்புக் கூறுவதில்லை. வழமையாக எந்த வேலைப் பொறுப்பைக் கொடுத்தாலும் தான் ஏற்றுக்கொண்டு செய்ததைப் போல் நடிப்பையும் ஈடுபாட்டோடுதான் அவர் செய்தார். "இன்னும் ஒரு நாடு", "முற்றுகை", "விடுதலைமூச்சு" ஆகிய படங்களில் இப்படித்தான் அவர் சிறப்பாகப் பங்கேற்று நடித்திருந்தார். இன்னும் ஒரு நாடு படத்தின் பின்பு பலர் அவரைக் "கிண்ணி" என்றே அழைத்தார்கள். கிண்ணியின் அம்மாவுடனான அன்பும் அவருக்கு என்றுமே இருந்தது. இளமைக்காலப் போராட்ட நாட்களில் வெடிபொருளில் அவருக்கிருந்த பரிச்சயம் திரைப்படத் தயாரிப்பில் அவருக்குக் கைகொடுத்தது.

எந்தப் படமாக இருந்தாலும் அதை எவர் தயாரித்தாலும் தவாதான் அதன் வெடிபொருள் கையாளலைச் செய்வார். ஏற்கனவே வெளியான உலகின் சண்டைப் படங்களில் வெடிபொருட்களை எவ்வாறு கையாண்டார்கள் என்ற பொறிமுறையைச் சொல்லித்தருவதற்கு எவரும் இல்லை. கேட்டுப் பெறுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லை. இங்குள்ள வளங்களை வைத்துக் கொண்டு கற்பனையையும் ஒருங்கிணைத்துச் செயற்படுவதே பொருத்தமாக இருந்தது. தவாதான் இந்த விடயத்தில் தமிழீழத்தின் முன்னோடி. ஒரே காட்சியில் சுடுவதும், அது படுவதும் தெரியவேண்டும் என்பதற்காக வாயு ரவையைத் தெரியுசெய்து அதுவும் தொடர் சூடாகச் சுடப்பட வேண்டும் என்பதற்காக வாயுரவைத் தயாரிப்பின்போதே சில ஏற்பாடுகளைச் செய்து வெற்றிபெற்றார்.

படப்பிடிப்புக்காக படைக்கலம் சார்ந்த பல ஏற்பாடுகளைச் செய்து திரைப்படங்களின் வெற்றிகளுக்கு வழிகோலினார். ஜெயசிக்குறுக் காலம் இயக்கத்தின் நெருக்கடிக்காலங்களில் ஒன்று. படப்பிடிப்புக்கென களமுனைக்கு அனுப்பப்படும் போராளிகள் ஒவ்வொருவராக விழுந்து கொண்டிருந்தனர். விழுப்புண் அல்லது வீரச்சாவு. அந்த நேரங்களில் தனது அன்புக்குரியவர்களின் இழப்பு தவாவை வெகுவாகப் பாதித்தது. தானே நேரில் சென்று களக்காட்சிகளைப் பதிவு செய்தார். ஜெயசிக்குறுவில் வீரச்சாவடைந்த கப்டன் ஜீவனுக்கு உறவினர்கள் அருகில் இல்லை. தவா தனது வீட்டிலேயே ஜீவனின் இறுதி நிகழ்வுகளைச் செய்துமுடித்தார். "ஜெயசிக்குறு எதிர்ச்சமர்" பற்றிய விவரணத்தயாரிப்பு ஜெயசிக்குறு சமரைப் போலவே நீண்டதாக இருந்தது.

களத்தில் நின்ற ஏராளமான போராளிகளினதும் களமுனைத் தளபதிகளினதும் பேட்டிகள் களமுனையில் வைத்தே ஒளிப்பதிவு செய்யப்பட்டன. தவாதான் நேரில் நின்று அனைத்தையும் ஒழுங்குபடுத்திப் படப்பிடிப்பைச் செய்தார். சமாதான காலத்தில் ஒருசில நாட்கள் திரைப்பட உருவாக்கப்பிரிவிற்கான உயர்தொழில்நுட்ப வலுக்கொண்ட நவீன டிஜிற்றல் கமராவைக் கொள்வனவு செய்ய தவா உட்பட மூன்றுபேர் இங்கிருந்து வெளிநாடு ஒன்றுக்குச் சென்றனர். கமராவின் தயாரிப்பாளர்கள் அதற்கான ஒரு மாதப் பயிற்சியை வழங்கிய பின்னர் தேர்வு வைத்து அதில் தேறிய பின்னரே கமராவை உரியவர்களிடம் கையளிப்பார்கள்.

ஆனால் தவாவின் திறமையும் சென்றவர்களின் திறமையும் கமராவின் தயாரிப்பாளர்களுக்கு வியப்பைத் தந்தது. போய்வர இரண்டு நாட்கள் பயிற்சிக்கு ஐந்து நாட்கள் என்று ஒரு கிழமைக்குள்ளேயே அந்த அலுவலை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு ஊர்வந்து சேர்ந்தார்கள். புதிய கமராவின் பெறுமதி அரியது. தவா பயிற்றுவிக்க ஏனையவர்கள் அதைக் கற்றுக்கொள்ள முழுநீளத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் அது முதன்மையாய் இருந்தது. இன்னமும் இருக்கின்றது. தவாவிடம் படப்பிடிப்புப் பயிற்சி பெற்று ஏராளமான ஆண், பெண் போராளிகள் வெளியேறியிருக்கின்றனர். அவர்களிடம் ஒரு ஆசிரியரைப் போல அவர் என்றும் பழகுவது கிடையாது.

எந்தப் பெரிய சிக்கலாயிருந்தாலும் போராளிகள் மனத்தாங்கலோடு அந்தச் சிக்கல்களைத் தவாவிடம் கொண்டு வருவர். படப்பிடிப்புத் துறையில் ஏற்படுகின்ற அனைத்துச் சிக்கல்களையுமே அவர் சிறிதாக நினைப்பார். உடனடியாக அப்பிரச்சினைகளுக்கான தீர்வைத் தவா தேடிக்கொடுப்பார். அவர் நிற்கும் இடத்தில் கலகலப்புக்கு என்றும் குறைவிருக்காது. அது அனல் பறக்கும் சண்டைக்களமாக இருந்தாலும் சரி, வியர்வை வழிந்தோடும் கடின வேலையென்றாலும் சரி அங்கு நடு நாயகனாக அவரே விளங்குவார். "தவாண்ணை வந்தால் எல்லா வேலையும் தானாக நடக்கும்.

எந்த வேலை என்றாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். யாரையாவது இதைச்செய், அதைச்செய் என்று கூறிவிட்டு அவர் இருக்க மாட்டார். அவரே முன்னின்று செய்வார். நாங்களும் இயல்பாக வேலையில் இறங்கி விடுவோம்" என்று சொல்கிறார்கள் தவா வளர்த்த போராளிகள். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதை ஒரு தலையாய கடமையாகவே அவர் கைக்கொள்ளுவார். இழப்பு வீடெனில் தோரணங்கட்டுவதிலிருந்து பாடை சுமப்பதுவரை, திருமணங்கள் எனில் பந்தல் போடுவதிலிருந்து உணவு பரிமாறுவது வரை பொறுப்புணர்வோடு பங்கெடுப்பார். அமைப்பின் முக்கிய தளபதி ஒருவருக்குத் திருமணம்.

திருமணத்தில் படப்பிடிப்பிலிருந்து உணவு பரிமாறுவதுவரை தவா ஓடி ஓடித் திரிந்தார். மணவிழாவுக்கு எதிர்பார்த்ததைவிடக் கூடுதலானோர் வந்திருந்தனர். உணவு பரிமாறுவதுதான் சிக்கல். ஒருமாதிரி வந்தவர்கள் எல்லோருக்கும் உணவு கொடுத்தாகிவிட்டது. திருமணத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் பலருக்குச் சரியான பசி. அன்று மதியத்திலிருந்து அவர்களுக்குச் சாப்பாடு இல்லை. நேரம் இரவு ஒன்பதைத் தாண்டிவிட்டது. கடைக்குச் சென்று உணவும் பெறமுடியாது. தவாவுக்கு எங்கிருந்துதான் அந்த அறிவு வந்ததோ தெரியாது. நிறை குடத்தில் வைத்திருந்த தேங்காயை உடைத்து, பரப்பி வைத்திருந்த அரிசியைக் கொறித்து வாழைப்பழத்துடன் தானும் சாப்பிட்டு இருந்தவர்கட்கும் கொடுத்து அன்றைய பொழுதைச் சமாளித்தேவிட்டார்.

வழமையாகத் தவாவுக்கு உணவு நேரத்துக்கு உண்ணவேண்டும். சுவைத்தும் ருசித்தும் சாப்பிடக்கூடியவர் அவர். ஆனாலும், படப்பிடிப்பு நடைபெறும் நாட்களில் நடிக்கவந்தவர்கள், படப்பிடிப்பில் ஈடுபட்டவர்கள், உதவியாளர்கள் என்று அனைவருக்கும் கொடுத்தபின்பு இறுதியாகச் சாப்பிடுபவர் தவாவாகத்தான் இருக்கும். சாப்பாடு இல்லையெனில் பட்டினி; அல்லது சமாளிப்பு. வாகனம் ஓடுவது தவாவுக்கு ஒரு கலை, அது எந்த ஊர்தி என்றாலும், யாருடையதாக இருந்தாலும் ஒருதடவை ஓடிப்பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவருக்கென்று ஒரு உந்துருளி இருக்கும.; வேலைக்காக வெளியில் செல்லும் யாராவது அதைக் கேட்டால்; கொடுத்துவிட்டு, நடந்தும் தன்பணி தொடர்வார்.

தவாவிடம் பெறுமதியான ஒரு பொருள் இருக்கின்றதெனில் பெடியளுக்குச் சந்தோசமாக இருக்கும். யாராவது ஒருவர் சிறிது நாட்களின் பின்னர் "தவாண்ணை அதைத் தாங்கோ" என வாங்கிவிடுவார். நிரந்தரமாக அவரிடம் எதுவுமே இருந்ததில்லை. அவரிடம் இருந்ததெல்லாம் அனைவருக்கும் சொந்தம். பதவியையும் பொறுப்புக்களையும் விரும்பாமல் ஒரு தொண்டனாகவே, ஒரு தொழிலாளியாகவே வாழ நினைத்தார். அதன்படி வாழ்ந்தார் தவா. அவரது மனதுக்குள் போராளிகள், பணியாளர்கள் என்ற வேறுபாடு ஒருபோதும் இருந்ததில்லை. கர்வமோ தலைக்கனமோ தலைதூக்கியதில்லை. இறுதியாக, "எல்லாளன்" நடவடிக்கையை வரலாறாக்கும் முழுநீளத் திரைப்படத்தின் தயாரிப்புவேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

தவாதான் அனைத்து வேலைகளுக்குமான முதுகெலும்பு. அகவையின் அடிப்படையில் ஓரளவு தெளிவாகக் காணப்பட்ட தவாவின் தோற்றம் ஒரு பொடியனைப்போல் உருமாறி இருந்தது. "தவாண்ணையைப் பார்க்க இப்பதான் வடிவாயிருக்குது" பலர் கூற புன்னகைத்தபடி கடமையில் இறங்குகிறார். பெப்ரவரிமாதம் 13ம் நாள் நிதர்சனத்தோடு மிக நெருக்கமாகவிருந்த செட்டி அம்மா குடும்பத்தில் இரண்டாவதாகவும் ஒருவீரச்சாவு நிகழ்ந்தது. மேஜர் செட்டியின் தமையன் லெப்.கேணல் புகழ்மாறன் - மன்னார்க் களமுனைக்குச் சென்று வித்துடலாக வீடு வந்திருந்தார். திரைப்படப் படப்பிடிப்பில் இருந்த தவா அனைத்தையும் விட்டுவிட்டுச் செட்டியம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.

அங்கு சகல ஒத்துழைப்புக்களையும் செய்து, வித்துடலைத் தூக்கிச் சுமந்து துயிலுமில்லம்வரை கொண்டுசென்று இறுதி நிகழ்வில் பங்கேற்றுவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார். பலர் அங்குதான் அவரை இறுதியாகக் கண்டார்கள் - மனைவியின் தாயார் உட்பட. வீட்டில் மனைவி, பிள்ளைகளுக்குக் காய்ச்சல் என்ற செய்தியை மாமி அவரிடம் கூறினார். தவா வீடுபோய் ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. அடுத்த ஞாயிறு வருவதாகக் கூறி மாமியாரை அனுப்பிவிட்டு தவா படப்பிடிப்புப் பணிகளில் இறங்கிவிட்டார். அவர்சொன்ன ஞாயிற்றுக் கிழமை தவா வீடு சென்றார் வித்துடலாக. பெப்ரவரி 17ஆம் நாளிரவு, களமுனை ஒன்றில் திரைப்படத்தின் காட்சிகளைப் பதிவு செய்துவிட்டு, அடுத்தநாட் காலை படப்பிடிப்புக்கான ஒழுங்குகளையும் ஏற்பாடு செய்துவிட்டு இரவு 10.00 மணிக்குத் தங்குமிடம் வந்துசேர்ந்தார்.

களமுனைக்கு அருகில் என்பதால் எதிரியின் எறிகணைகளுக்குப் பாதுகாப்பாக அனைவரையும் பதுங்குகுழிக்குள் இறங்கிப் படுக்கச் செய்துவிட்டு ஒரு சிலருடன் மேலே உறங்கிய தவா, மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. அவருடன் மேஜர் புகழ்மாறன், போர் உதவிப்படைவீரர்களான நிதர்சனப் பணியாளர்கள் ரவி, அகிலன் ஆகியோரும் மண்ணின் மடியில் இரண்டறக் கலந்தனர். ஒருநாளும் ஓய்ந்திருக்காத, உழைப்பு அன்றி உறங்கிக் கிடக்காத தவாவை வித்துடலாக உறக்கத்திற் பார்த்த அனைவருக்குமே நெஞ்சம் பதறித்துடித்தது. 23 வருடங்களாக விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகளில் சலிப்பின்றி, களைப்பின்றி ஓயாது சுழன்ற அந்தப் புயல் ஓய்ந்துபோய்க் கிடந்தது. 1987 இல் இருந்து உயிர் பிரியும் வரை படப்பிடிப்பையே பணியாகச்செய்து, அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்து,....

வரலாறு தந்து உதவியதுக்கு 
மிக்க நன்றி புலவன் மாஸ்டர்.

-ஈழம் ரஞ்சன் -
« PREV
NEXT »

No comments