Latest News

January 27, 2017

இலங்கையில் தொடரும் சித்திரவதை: ஐ.நாவிடம் சிக்கிய புதிய அரசின் ஆதாரம்
by admin - 0

ஸ்ரீலங்காவில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, சிறிலங்காவின் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிசார் உட்பட சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக விமர்சித்து நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் தற்போதைய ரணில் – மைத்ரி அரசாங்கத்திலும் வெள்ளை வான் கடத்தல்கள் மாத்திரமன்றி கைதுசெய்யப்படுபவர்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளுக்கும் உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தொடர்பான குழு வெளியிட்டுள்ள 24 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைத்தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடடமைப்பு ரீதியான விசாரணை செய்வதற்கு முடியாமை மற்றம் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீன நிறுவனமாக இயங்காமை ஆகிய விடையங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் ஐ.நா குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சட்ட கட்டமைப்பு இராணுவம் உட்பட முப்படையினர் பொலிசார் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றம் நீதிமன்றம் ஆகியற்றை மறுசீரமைப்புக்கு உட்படுத்தாமையால் சித்திரதைகள் தொடரக்கூடிய ஆபத்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீ.ஐ.டி மற்றும் சீ.ஐ.டி யினர் தொடர்ந்தும் உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கும் பேராசிரியர் ஜுவான் மெண்தெஸ் இவை தொடர்பில் விசாரணை நடத்தாமை குறித்தும் விசனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி பெற்றுக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலங்களை எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாது அப்படியே சாட்சியாக ஏற்றுக்கொள்ளும் நீதிமன்றத்தின் நடைமுறையை வன்மையாகக் கண்டிக்கும் மெந்தெஸ் இந்த நடவடிக்கைகள் சித்திரவதைகளை தொடர்ந்தும் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகளுக்கு துணையாக இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா அதிகாரி அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச சட்டமூலம் சர்வதேச விதிமுறைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சித்திரவதைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை உண்மையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்தை ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர் யுவான் மெந்தெஸ் வலியுறுத்தியுள்ளார்.
« PREV
NEXT »

No comments