23-09-2016
எழுகதமிழுக்கு அணிதிரளுங்கள்-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல்
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் 2016 செப்ரெம்பர் 24 (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும் மாபெரும் எழுகதமிழ் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்று வரும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
விவசாய மற்றும் வர்த்தக பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.
அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
காணாமல் போனோருக்கு நீதி வேண்டும்.
கடற்தொழிலில் தென்னிலங்கை மீனவரின் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும் என்னும் கோரிக்கைகளையும் இப் பேரணி முன்வைக்கின்றது.
அத்துடன் இன்னும் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்காவுக்கு புதிய அரசியலமைப்பு வரவுள்ளது. குறித்த புதிய அரசியல் யாப்பானது தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சந்தித்துவரும் கட்டமைப்பு சார் இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில், இணைந்த வடக்கு கிழக்கில், தமிழர் தேசம், தமிழ்த்தேசத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகிக்கும் சமஸ்டி யாப்பாக உருவாக்கக் கூடிய நிலையை தோற்றுவிப்பதே இப்பேரணியின் பிரதான நோக்கமாகும்.
அனைத்துத் தமிழ் மக்களையும் சாதி, மத, பிரதேச பேதங்களைக் கடந்து கலந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த ஆயிரமாயிரமாய் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
பொதுச் செயலாளர் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
No comments
Post a Comment