உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் அமைதியான அகிம்சை வழிப் போராட்டத்தை மதப் பின்னணியும் அரசியல் பின்னணியும் சேர்ந்து வன்முறையைப் பிரயோகித்து அடாவடி புரிந்துள்ளது. இதில் பொலிஸாரும் தமது கைவரிசையைக் காட்டி ரவுடித்தனம் புரிந்துள்ளார்கள். இதனால் அக்கல்லூரியின் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனைத் தட்டிக் கேட்கத் திராணியற்றவர்களாக வடமாகாணக் கல்விச் சமூகம் வாய் மூடி மௌனித்து இருந்து வேடிக்கை பார்க்கின்றது.
சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம் என்று கூறி பெருமளவு நிதிகளைச் செலவு செய்து பெருமெடுப்பில் கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்தும் மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனத் தம்மைக் கூறித் திரிபவர்கள் கூட மாணவிகள் விடயத்தில் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.
அதே நேரம் சக பாடசாலை மாணவிகளின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு அவர்களின் அகிம்சை வழிப் போராட்டம் அடாவடிகளால் அடக்க முற்பட்டதை ஏனைய பாடசாலைகளின் மாணவர்கள் கூட மாணவிகளுக்காகக் கூரல்கொடுக்க முற்படாமல் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள்தானே இதற்காக நாம் ஏன் குரல் கொடுக்க வேண்டும் எமக்கு ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே என்ற மன நிலையில் மௌனிகளாகவே இருந்து வருகின்றார்கள்.
ஊடகவியலாளர்கள், மாணவிகளின் பெற்றோர், ஏனைய பொதுமக்கள் முன்னிலையில் மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்ட அடாவடிகள், வன்முறைகள் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் ஊடகங்களில் வெளியாகி ஆதாரமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் சிலரால் உண்மைகளை மூடிமறைக்கும் நோக்குடன் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீது எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை எனவும் சில ஊடகங்கள் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பான பொய்ச் செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் பத்திரிகைளில் பணம் கொடுத்து விளம்பரங்களை வெளியிட்டுள்ளார்கள்.
No comments
Post a Comment