யாழ்ப்பாணத்தில் கடந்த 7ஆம் திகதி உயிரிழந்த போராளியின் பூதவுடலை பொறுப்பேற்க எவரும் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை – கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த யூலை மாதம் 24 ஆம் திகதி உடல்நலக்குறைவால் பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதனையடுத்து குறித்த போராளியின் சடலத்தை பொறுப்பேற்க எவரும் முன்வராத நிலையில் குறித்த சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வைத்தியசாலை பிரேத பரிசோதகர் மற்றும் பொலிசாரின் தலையீட்டை அடுத்து உயிரிழந்த போராளியின் தந்தையின் சகோதரர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு அவரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய போராளியின் சடலத்தை பொறுப்பேற்ற நபர், வைத்தியசாலையிலிருந்து நேரடியாக நேற்று செவ்வாய்க்கிழமை ஆனைக்கோட்டை – கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்துள்ளார்.
12 ஆண்டுகளாக குடும்பத்திலிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ள முன்னாள் போராளியான நடராஜா கலியுகராஜாவின் பூதவுடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் தமக்கு பாதுகாப்புப் படையினராலும் அயலவர்களாலும் சிக்கல்கள் எழலாம் என்பதாலேயே சடலத்தை பொறுப்பேற்க அவரது உறவினர்களும் நண்பர்களும் மறுத்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் பொலிசாரும் தாமும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கையை அடுத்து தயக்கத்துடன் பொறுப்பேற்ற அவரது சிறிய தந்தை நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் இதுவே போராளிகளின் நிலமை என்றும் பெயரைக் குறிப்பிட விரும்பாத மருத்துவசாலை அதிகாரி தெரிவித்தார்.
உயிரிழந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக நீண்டகாலமாக இருந்து பின்னர் 2009 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.
No comments
Post a Comment