Latest News

August 14, 2016

போய் வா என் தம்பி.. தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்.. நா. முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி
by admin - 0

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இரங்கலும், வேதனையும் தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளவரை, மொழி உள்ளவரை முத்துக்குமாரும் நிலைத்திருப்பார் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார் சீமான்.

சீமான் இயக்கிய வீர நடை படம் மூலமாகத்தான் பாடலாசிரியராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நா. முத்துக்குமார். அன்று தொடங்கிய அவரது பாட்டு வரிசை நிற்காமல் தொய்வில்லாமல் தமிழ் நெஞ்சங்களை தாலாட்டி வந்தது. இன்று நின்று போய் விட்டது.

முத்துக்குமார் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


என் ஆருயிர்த் தம்பி 

எனது ஆருயிர் தம்பியும் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைவுற்ற செய்திகேட்டு ஆழ்ந்த மனத் துயரில் சிக்கித் தவிக்கிறேன். என் தம்பி முத்துக்குமார் தமிழ்த் தேசிய இனத்தின் மாபெரும் இளங்கவி. ஏறத்தாழ 1,500க்கு மேல் எழுதி திரைப்பட பாடல்களை தன் அழகு தமிழால் உயிர்ப்பிக்கச் செய்த மாபெரும் திறமையாளன்.




  • கவிஞன் மட்டுமல்ல, மிகச் சிறந்த தமிழுணர்வாளன் 

    என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் ஆழ்ந்த மொழி நுட்புலமும், சிறந்த சொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகு தமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும் அவனது திறமையைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். அந்த வியப்புதான் என் தம்பி முத்துக்குமாரை நான் இயக்கிய ‘வீரநடை' திரைப்படத்தின் பாடலாசிரியராக அறிமுகம் செய்யத்தூண்டியது. வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்ற அநீதிகளைக் கண்டு தன் வார்த்தை சவுக்கினை எடுத்து விளாசுகிற கலகக்காரனாக என் தம்பி முத்துக்குமார் திகழ்ந்தான்.

  • தமிழனை தலைநிமிரச் செய்த என் தம்பி 

    அரசியல் களத்தில் நான் முன்னெடுத்த எல்லா முயற்சிகளிலும், அவனது வாழ்த்து அழகு தமிழ் கவிதையாய் வந்துகொண்டே இருந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்று தமிழனின் திறமையை தலைநிமிரச் செய்த என் தம்பி இன்று மறைந்துபோனது தனிப்பட்ட அளவில், வாழ்நாளில் நான் அடைந்திருக்கிற பெருந்துயர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் இழப்பொன்றை தமிழ்த்தேசிய இனத்தின் படைப்புலகம் இன்று அடைந்திருக்கிறது.

  • புகழ் வணக்கம் 

    என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரில் ஒருவனாக நின்று துயரில் நானும் பங்கேற்கிறேன். விழிகள் முழுக்க நிரம்பி ததும்பும் கண்ணீர்தாரைகளால் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களுக்கு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

  • என்றென்றும் என் தம்பியின் நினைவுகளுடன் 

    என்றென்றும் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் நினைவுகளோடும், அவன் ஆழ்மனதில் கிளர்ந்து கொண்டிருந்த தமிழின விடுதலை என்கிற கனவுகளோடும், அவன் அண்ணனாகிய நிச்சயம் பயணிப்பேன் என அவனிடத்தில் நான் உறுதிகூறுகிறேன்.

  • போய் வா தம்பி 

    போய் வா என் தம்பி!
    இம் மொழியுள்ளவரை
    உன் கவி இருக்கும்.
    தமிழ் உள்ளவரை நீயிருப்பாய் என்று தனது அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.


« PREV
NEXT »

No comments