அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக உறவினர்களிடம் கடந்த கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு, பத்திராயன் வடக்கைச் சேர்ந்த கந்தப்பு ஜெயபாலு (52 வயது) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவராவர்.
வவுனியாவுக்கு தொழில் தேடிச் சென்ற இவரை 08–10–2010 அன்று ஹெரோயின் விற்பனை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் நான்காம் மாடியில் வைத்து இவர் விசாரணை செய்யப்பட்ட பின்னர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவர் மீதான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணைகள் பூர்த்தியடைந்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், கைதியின் மனைவி அங்கு சென்றிருந்தார்.
அந்நேரம் கைதி மாரடைப்பால் மரணமானதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மனைவி அநுராதபுரம் சென்று சடலத்தை பொறுப்பேற்றுக்கொண்டார்.
விடுதலையாக இருந்தவர் திடிரென இறந்தது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
கைதியின் இறுதிக் கிரியைகள் கடந்த சனிக் கிழமை மாலை 4 மணிக்கு பத்திராயனில் இடம் பெற்றது.
No comments
Post a Comment