Latest News

November 16, 2015

தமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது!
by Unknown - 0

சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

சிறிலங்காவின் சிறைகளில் தமிழ்கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கும் தோழமையினைத் தெரிவித்தும், இவ்விவகாரத்தினை மையப்படுத்தி தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற துணைப் போராட்டங்களுக்கு உறுதுணையாவும் இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொள்கின்றது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் இன்று 16ம் நாள் திங்கட்கிழமை ,பிரித்தானிய பிரதமரது வாயில்தளதுக்கு முன்னால் மாலை 5 மணிக்கு கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம், நா. தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் திருக்குமரன் அவர்களது முன்னெடுப்பில்  சற்றுமுன் தொடங்கியது.

மேலும் இதர புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்படுகின்ற அடையாள உண்ணாநிலைப் போராட்டங்களில் பங்கெடுக்க விரும்பும் உணர்வாளர்களை குறித்த media@tgte.org இந்த மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சு கோரியுள்ளது.

சிறிலங்காவின் சிறைகளில் எவ்வித அடிப்படையுமின்றி தமிழ்க் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, அனைத்துலகச் சட்டங்களை மீறும் செயலாகும் என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடாகவுள்ளது.

அனைத்துலக சட்டங்களுக்கு அமைய தமிழ்க் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதனை வலியுறுத்ததும் இக்கவனயீர்ப்பு போராட்டம் அனைத்துலக சமூகம் நோக்கி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது.

தமிமிழ்க் கைதிகள் அனைவரும் அனைத்துலக சட்ட விதிகளின் படி பாதுக்காப்புக்கு உரியவர்கள் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்தவித முடிவும் இன்றி இவர்களைத் சிறையில் வைத்திருப்பது ஜெனீவா சட்டவிதிகளையும்  வழக்கிலுள்ள அனைத்துலக சட்டங்களையும் மீறும் செயலாகும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரையும் போர்க்கைதிகள் எனப் பகிரங்கமாக அறிவித்தல் வேண்டும்.

அனைத்துலக சட்ட விதிகளுக்கமைய, இக்கைதிகளின் உரிமைகள் மீறப்படும் நடவடிக்கைகளுக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப் பட வேண்டும் என்பதை உறுதி செய்வதோடு, அனைத்துலக சட்டத்திற்குப் முரணாக இவர்களைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள் மீது நீதி விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். 

யுத்த காலத்தில் இணக்கப்பாட்டாளராக செயற்பட்ட நோர்வே அரசினையும், யுத்த நிறுத்த உடன்படிக்கையின் போது இணைத் தலைமை வகித்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளையும், இவ்விவகாரத்திர் தலையிட்டு அனைத்துலக  சட்ட விதிகளின் கீழ் சிறிலங்கா அரசுக்கு உள்ள பொறுப்பினை வலியுறுத்த வேண்டும் என நாம் வேண்டுகின்றோம்.

முக்கியமாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மதிப்புமிகு அல்ஹசைன் அவர்கள் தனது செல்வாக்கைப் பிரயோகித்து சட்டத்திற்கு முரணான  வகையில் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரி நிற்கின்றது.









   

« PREV
NEXT »

No comments