Latest News

October 06, 2015

தமிழீழத்தில் உன்னத சேவையினை ஆற்றும் எமது ஆசிரியர்களுக்கு சர்வதேச ஆசிரியர் தினவாழ்த்துக்கள் ! அடைக்கலநாதன்,வினோ
by Unknown - 0

06.10.2015 இன்று சர்வதேச ஆசிரியர் தின நாளில் எமது தமிழர் தாயகத்தில் உன்னத சேவையினை ஆற்றிகொண்டிருக்கும் சகல ஆசான்களுக்கும், அவர்களின் மகத்தான பணிக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்த இனிய நன் நாளில் தெரிவித்து நிற்கின்றோம் .

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வேத வாக்கிட்கு, ஏற்றால் போல் வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கும், உங்கள் உயர்ந்த சேவைக்கும் உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.

அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வெறும் மாணவர்களாக சமுதாயத்திலிருந்து பாடசாலைக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், கல்வி என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே நீங்களே !!

எங்கே நடப்படுகிறாயோ, அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள் மட்டும் தான் .. உங்களிடத்தில் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் , என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் நீங்கள் தான் கற்றுக் கொடுக்கின்றீர்கள்.

. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களாகிய உங்கள் மனதிலும் , முகத்தில் ஓர் மகிழ்ச்சி தோன்றும்.

இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் , ஒப்படைக்கப்படும் மாணவர்களை நல்ல மாணவர்களாக ஆக்குவதோடு, நல்ல மனிதர்களாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அத்துடன் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும்.

அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்களாகிய நீங்கள் உரிமையாளர்களாக மாறுகின்றீர்கள் .

எமது தமிழீழத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் நீங்களே . எமது மண்ணுக்காக ,மண்ணின் கல்வி ,மாணவ சமுதாயத்தின் வளர்ச்சிக்காக உங்களை அர்ப்பணித்த நீங்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.!

எமது தமிழர்தாயகத்தில் ஆசிரியர்களை தெய்வீகத்தன்மையுடன் மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை நாம் கொண்டுள்ளோம் ,
அந்த வகையில் சிறந்த பணியினை ஆற்றிகொண்டிருக்கும் உங்களை கௌரவித்து, மரியாதை செய்து, நன்றியுடன் நினைவு கூறுவதற்கு சிறப்பாக வருடத்தில் வருகின்ற இந்த தினத்திலே ஒரு கணம், எமது முழு உள்ளதோடு ,எமது நன்றிகளுடனான பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளுகின்றோம் !!
« PREV
NEXT »

No comments