Latest News

September 21, 2015

முல்லைத்தீவில் ஐந்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியது, தமிழரின் ஆணையம்.
by அகலினியன் - 0

முல்லைத்தீவில் ஐந்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியது, தமிழரின் ஆணையம்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான... பின்தங்கிய நிலையில் உள்ள அதாவது வாழ்வாதாரங்களை இழந்த உறவுகள்... உடலுறுப்புக்கள் இழந்தவர்கள் மற்றும் உதவிகளற்ற குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான தொழில் உதவி, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளை வழங்கி சமீப காலமாக பேருதவி புரிந்து வருகின்ற உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் இந்த மாதத்திற்கான உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் வாழ்வாதாரப் பயனாளிகளாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே ஒரு பயனாளிக்கு வாழ்வாதார நிதியாக ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை வழங்கி வந்த உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது, இம்முறை அவசர தேவைகளாக சிறு, சிறு தொகை உதவிகளை எதிர்பார்த்து ஆணையத்திடம் வேண்டுகோள் வைத்த ஐந்து குடும்பங்களை ஆதாரபூர்வமாக தேர்வு செய்து உடனடி உதவிகளை கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வழங்கியுள்ளது.

முதலாவது பயனாளியாக இறுதி யுத்தத்தின் போது படுகாயமடைந்து இடதுகால் பாதிப்பிற்குள்ளாகி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டடுள்ளதோடு பிறப்பிலிருந்தே வலது கை இயலாமல் வாழ்ந்து வரும் கள்ளப்பாடு தெற்கு, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சிவகிருபலிங்கம் ஞானேஸ்வரன் என்பவருக்கு, அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோழி வளர்ப்பிற்காக இருபத்தைந்தாயிரம் (25,000) இலங்கை ரூபாய்களை வழங்கியுள்ளது. 

மேற்குறிப்பிட்ட ஞானேஸ்வரனின் மனைவியும் அதே யுத்தத்தின் போது படுகாயமடைந்து வலது காலை இழந்துள்ளதோடு இடது கால் மற்றும் வலது கையிலுள்ள கட்டை விரல்களையும் இழந்து அத்துடன் இடது கையும் முறிந்து பொருத்தத் தகடு (Plate) பொருத்தப்பட்டு தங்களது இரண்டு சிறு வயது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, இரண்டாவது பயனாளியாக இறுதி யுத்தத்தின் போது கணவரை இழந்து தனது சிறு வயது மகனுடன் எந்தவித உதவிகளுமின்றி வாழ்ந்து வரும் உண்ணாப்புலவு, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. ஜனார்த்தனன் அன்ரனிற்றா நிசாந்தினி என்பவருக்கு, அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோழி வளர்ப்பிற்காக இருபதினாயிரம் (20,000) இலங்கை ரூபாய்களும்...

மூன்றாவது பயனாளியாக இறுதி யுத்தத்தின் போது கணவரை இழந்து இரண்டு சிறு வயது குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் மூங்கிலாறு தெற்கு, உடையார்கட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. தலையகுமார் மேரி அனற்றலா றோய் என்பவருக்கு, அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோழி வளர்ப்பிற்காக இருபத்தைந்தாயிரம் (25,000) இலங்கை ரூபாய்களும்...

நான்காவது பயனாளியாக இறுதி யுத்தத்தின் போது கணவரை இழந்து சிறுநீரக பாதிப்பிற்குள்ளான தனது இளவயது மகனுடன் வாழ்ந்து வரும் முள்ளியவளை, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. ஜெயச்சந்திரன் இளவரசி நாயகி என்பவருக்கு, அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தூர இடத்திற்கு நடந்தே சென்று கல்வி பயின்று வரும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது ஒரே மகனுக்காக துவிச்சக்கர வண்டி ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக பதினைந்தாயிரம் (15,000) இலங்கை ரூபாய்களும்...

ஐந்தாவது பயனாளியாக கணவரை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் விசுவமடுவைச் சேர்ந்த திருமதி. விக்கினராஜா மோகனாம்பிகை என்பவருக்கு, அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க விவசாயம் செய்வதற்கான வேலையிடையில் நின்ற கிணறு வெட்டுவதற்காக பதினைந்தாயிரம் (15,000) இலங்கை ரூபாய்களும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து உறவுகளுக்கும், உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் சார்பாக ஆணையத்தின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க வடமாகாண சபை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. துரைராசா ரவிகரன் அவர்கள் நேரடியாகச் சென்று உதவிகளை வழங்கியிருந்தார்.

ஆணையத்தின் வாழ்வாதார நிதிகளைப் பெற்றுக் கொண்ட அனைத்து உறவுகளும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திற்கும், உதவிகள் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் தங்களது நன்றிகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொண்டனர்.

உதவிகளை வழங்கிய வடமாகாண சபை உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. துரைராசா ரவிகரன் அவர்களுக்கும், அனைத்து உதவி செயற்பாடுகளையும் பொறுப்பேற்று சீராக நடைமுறைப்படுத்திய சமூக சேவகரும் இலங்கைக்கான ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளருக்கும் மற்றும் உதவிகள் நல்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையங்கள் ஊடாக தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
« PREV
NEXT »

No comments