ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாத அமர்விற்கு முன்னதாக அதன் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்டெம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், விஜயத்திற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அரசாங்கத் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு அடுத்த மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது அலுவலகம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை அரசாங்கத்திடம் அவர் கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்துடன் தொடர்புடைய சாட்சிகள் மற்றும் ஏனையவர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றவை என நம்பப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய அவசியமான பல்வேறு பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.?
No comments
Post a Comment