துரதிஸ்டவசமாக இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பிற்கு தெரிதாக முக்கியத்துவம் கொடுக்கத் தவறியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இருந்து நாங்கள் மாறாவிட்டால் எமது நாடு இல்லாமல் போய்விடும் என முன்னாள் பாதுக்காப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;
ஐ.எஸ் ஆயுததாரிகளுடன் இணைந்து சிரியாவில் போராடிய இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தாக்குதலில் பலியானதையும் அறிகின்றோம். இந்த நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
நல்லிணக்கமோ, ஜனநாயகமோ, பொருளாதார அபிவிருத்தியோ எதுவாயினும் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்துள்ள விடயம் தேசிய பாதுகாப்பாகும்.
இது குறித்து பேசும்போது நல்லிணக்கத்தை இல்லாதொழிக்கவே இப்படி பேசுகிறார்கள் என்கின்றனர். எனினும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய பின் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல முயற்சிகளை செய்தது.
அதற்கு மேற்குலக நாடுகள், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள், குறிப்பாக யுத்த நேரத்தில் அவர்களது தேவைகளை பெற்றுக்கொண்டோர் பிழையான சிந்தனையை மக்களிடையே கொண்டுசென்று ஆட்சியைக் கவிழ்த்தனர்.
இந்நிலையில் குறுகிய காலத்திற்குள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது எனத் தெரிவித்தார்.
No comments
Post a Comment