1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வு தற்போது பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோக பூர்வ வதிவிடமான No10 Downing Street இல் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இலங்கையின் ஆட்சியில் இருந்த இரு இனவாத அரசுகளும் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான இனப்படுகொலையினை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு காலப்பகுதிகளில் அரங்கேற்றியுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேசத்திடம் நீதியை வேண்டிநிற்கும் இத்தருணத்தில் அதற்கான அதிகாரத்தினை மீண்டும் குற்றவாளிகளின் கரங்களில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 67 ஆண்டுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கான நீதியை வழங்க மறுக்கும் சிங்களப் பேரினவாத அரசு உள்ளக விசாரணை எனும் கபட நாடகம் மூலம் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க மறுக்கிறது.
வல்லாதிக்க சக்திகளின் ஆடு களமாக மாற்றப்பட்டுள்ள இலங்கைத் தீவில் தமது பூகோள நலன்களுக்காக இலங்கையின் ஆட்சி பீடத்தினைத் திருப்திப்படுத்த அவர்கள் முனைவதையும் இலங்கை அரசுக்கெதிராக பல்லாயிரம் கண்கண்ட சாட்சியங்கள் இருந்தும், உள்ளக விசாரணையை நோக்கி மெதுவாக காய்களை நகர்த்திச் செல்லும் போக்கினையும் நாம் முறியடிக்க வேண்டும்.
83 ஆம் ஆண்டு கறுப்பு யூலைப் படுகொலைகள் உட்பட தமிழ் மக்களிற்கெதிராக நடத்தப்பட்ட அனைத்து இன அழிப்பு நடவடிக்கைகளுக்கும் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை உலகத் தமிழ் மக்கள் கை விடப் போவதில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!
No comments
Post a Comment