Latest News

July 23, 2015

ஐந்து வயதுக் குழந்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராம்..!!!!!
by admin - 0

ஐந்து வயதுக் குழந்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராம்..!!!!!


நேற்றைய மாலைமலர் பத்திரிகையில் "சயனைடு குப்பிகளுடன் பிடிபட்ட விடுதலை புலி உள்ளிட்ட 3 பேரிடம் 2–வது நாளாக விசாரணை" என்ற தலைப்பில் வெளியான செய்தியில்...
"இலங்கைத் தமிழரான கிருஸ்ணகுமார் வயது 30" எனவும், 
தொடர்ந்து....
"கிருஷ்ணகுமார் 1990–ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். அந்த இயக்க தலைவரான பிரபாகரனிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்." எனவும் தொடர்கிறது.
இதில் என்ன வேடிக்கை என்றால், தற்போது கிருஷ்ணகுமாருக்கு 30 வயதென்றால்... 90 ஆம் ஆண்டு கிருஷ்ணகுமாருக்கு 5 வயதென சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். அவ்வாறு இருக்கும் போது எந்தவகையில் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு உதவியாளராக 5 வயது குழந்தை இருக்க முடியும்??? 
10 வயதுக் குழந்தைகளுக்கே உதவியாளர்கள் தேவைப்படும் போது... 5 வயதுக் குழந்தை பெரும் இயக்கத்தின் தலைவரான ஒருவருக்கு உதவியாளராக இருந்தார் என செய்தி பிரசுரித்து எதைச் சொல்ல வருகிறார்கள் இந்த ஊடாகக்காரர்கள்?? 
■ விடுதலைப் புலிகள் பச்சைக் குழந்தைகளை தமது அமைப்பில் வைத்திருந்தார்கள் எனக் குற்றம் சாட்டி மேலும் அந்த அமைப்பிற்கு களங்கம் விளைவிக்கவா???
அல்லது....
■ கைதாகிய கிருஷ்ணகுமார் (வயது 30) என்பவரை இவ்வாறான பொய் வழக்குகளைச் சுமத்தி தமிழகத்தில் முக்கிய விடுதலைப் புலிகள் தற்போதும் உள்ளார்கள் என பறைசாற்றவா?
அல்லது...
■ ராஜீவ் வழக்கில் உள்ள ஏழ்வரின் விடுதலை சம்மந்தமான நேரத்தில் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை திரிபுபடுத்திப் போடுவதால் "முக்கிய விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இருப்பதாக, உளவுத்துறை மூலம் மத்திய அரசிற்கு தெரிவித்து ஏழ்வரின் விடுதலையை தடை செய்வதா?
■ இவைகளெல்லாம் இல்லை, தமக்குத் தரப்பட்ட செய்தி எனில், செய்தியின் உண்மைத் தன்மை அறியாமல் பிரசுரிக்கும் அளவிற்கு மாலைமலர் பத்திரிகை தரம்கெட்டுப் போய் விட்டதா?
அல்லது...
■ தமிழக மக்கள் அனைவரும் எதைப் பதிவு செய்தாலும் பார்த்துப் படித்து விட்டு நம்பிவிடும் முட்டாள்கள் என நினைக்கின்றார்களா?
அல்லது...
■ மேற்கண்ட செய்தியை ஊடகங்களுக்கு வழங்கிய இந்தியாவின் உளுத்துப் போன உளவுத்துறையானது தமிழகத்தில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் உள்ளதென தமிழகத்தில் வாழ்கின்ற ஈழ உறவுகளைக் கைது செய்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டு "இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தொடர்ந்தும் தடை விதிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான அரசியல் நோக்கில் செயற்படுகிறார்களா? 
யாரை நம்புவது?????
2009 ஆம் ஆண்டின் பிற்பாடு தமிழகத்தில் உள்ள தமிழக மக்கள் வேறு..!! நீங்கள் எதைச் சொன்னாலும் நம்புமளவிற்கு தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல..!!
மாலைமலரின் மேற்கண்ட செய்தியின் இணைய முகவரி: http://www.maalaimalar.com/2015/07/22094115/arrested-3-people-including-LT.html
- வல்வை அகலினியன்.
« PREV
NEXT »

No comments