நோயாளியை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை கிளிநொச்சி மருத்துவமனை தரிப்பிட ஆட்டோக்காரர்கள் துரத்திச் சென்று தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி, ஆட்டோவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மருத்துவமனைக்கு தனது ஆட்டோவில் நோயாளியை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுகொண்டிருந்த ஜீவா என்னும் ஆட்டோ ஓட்டுநரை மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள ஆட்டோ தரிப்பிடத்தில் வைத்து ஆட்டோ ஓட்டும் ரமேஸ் என்பவரும் அவரது கூட்டத்தினரும் இன்று இரவு 7.00 மணியளவில் கரடிப்போக்குச் சந்தியில் வைத்து வழிமறித்து மிருகத்தனமாகத் தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளான ஜீவா வயது-38 என்பவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவரது ஆட்டோவும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரால் ஆட்டோ மீட்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கிளிநொச்சி மருத்துவமனைக்கு முன்னால் ஆட்டோத்தரிப்பிடத்தில் வைத்து ஆட்டோ ஓட்டுபவர்களின் அடாவடிகளால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
கிளிநொச்சி மருத்துவமனை நோயாளர்களை கிளிநொச்சி பொதுமருத்துவமனைக்கு முன்னால் உள்ள ஆட்டோ தரிப்பிடத்தில் ஆட்டோ வைத்திருந்து ஓடபவர்களைத் தவிர ஏனை ஆட்டோக்காரர்கள் எவரும் ஏற்றிச் செல்ல முடியாது என்னும் கட்டுப்பாடுகளை தாமே உருவாக்கிக்கொண்ட மருத்துவமனை ஆட்டோத்தரிப்பிடத்தில் ஆட்டோவைத்திருப்பவர்கள் சிலர் ஏனைய ஆட்டோக்காரர்களை இப்படியாகத் தாக்கி அச்சுறுத்தி அடாவடியாக நடந்துகொள்கின்றார்கள். இதனால் சொந்த ஆட்டோக்களில் மருத்துவமனைக்கு நோயாளர்களை ஏற்றிச் செல்பவர்களும் மருத்துவமனையிலிருந்து நோயாளர்களை திருப்பவும் வீட்டுக்கு ஏற்றிச்செல்ல முடியாத நிலையில் அடாவடித்தனம் புரிகின்றார்கள்.
இப்படியான சம்பவங்களால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். அண்மையில் கிளிநொச்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காகச் சென்ற பெண்ணையும் குழந்தையையும் ஏற்றிச் செல்வதற்காகச் தமது சொந்த ஆட்டோவில் சென்ற உறவினரை அவ் ஆட்டோவில் ஏற்ற விடாது தகராற்றில் ஈடுபட்டு அப்பெண் தனது குழந்தையுடன் ஆட்டோவில் இருந்து இறங்கி அழுதவாறு நடந்து சென்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அவர்கள் கூறுவதை மீறி நோயாளர்கள் தாம் விரும்பும் ஆட்டோவில் ஏற முற்பட்டால் அல்லது தமது சொந்த ஆட்டோவில் ஏற முற்பட்டால் ஆட்டோவைச் செல்லவிடாது வழிமறித்து அடாவடியில் ஈடுபடும் இவர்கள் இப்படியாகத் துரத்திச் சென்று வழிமறித்துத் தாக்குதல் நடத்தி ரவுடித்தனங்களிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

No comments:
Post a Comment