பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாரிஸின் 11வது மாவட்டத்தில் ஒரு உணவகத்தில் குறைந்தது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.
பட்டக்லான் கலை மையம் என்ற இடத்தில் நடந்த சம்பவத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பிரெஞ்சு ஊடகங்கள் கூறுகின்றன.
பல பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், 60 பேர் வரை பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
பிரான்ஸ் தேசிய விளையாட்டரங்கமான, ஸ்டேட் தெ பிரான்சுக்கு அருகே இருந்த மதுவகம் ஒன்றுக்கு வெளியே மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த அரங்கில் பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்து கொண்டிருந்த நட்புரீதியான போட்டி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் அவர் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
போலிசார் இப்பகுதிக்கு விரைந்து வந்து அந்த இடத்தை மூடிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.



No comments:
Post a Comment