அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம் வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் நில ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்குமாக எதிர்வரும் 2ம் 3ம் திகதிகளில் விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தல் என்ற தீர்மானத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.
காலை 7:00 மணிக்கே தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கூடிய மக்கள் 11:00 மணியை அண்மித்த போது பல மடங்காக மாறியினர்.
ஒரு கட்டத்தில் எதிர்ப்புக்களையும் மீறி மக்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் நுழையவும் முற்பட்டு நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுள்ளதென எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆராய்வதற்கும் அது தொடர்பில் தீர்மானங்களை வகுப்பதற்கும் எதிர்வரும் 2ம் 3ம் திகதிகளில் மீளவும் ஒன்று கூடுவது என்ற தீர்மானத்துடன் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுடன், போராட்டத்தின் நிறைவில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் உச்சநீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்காக பெருமளவு மக்கள் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தொடர் போராட்டங்கள் அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் பொலிஸாரினதும் இராணுவத்தினரதும் கெடுபிடிகள் இன்று அதியுச்சக் கட்டத்தை எட்டியிருந்ததை காணமுடிந்தது.
ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் குரல் எழுப்பி சர்வதேசத்தை அழுத்தம் கொடுக்க வைக்கவேண்டும்!- எஸ். பாஸ்கரா
தமிழ் மக்களாகி நாம் போராட்டங்களின் மூலம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து களப்போராட்டத்தில் இறங்க வேண்டும். இதன் மூலமாக எழும் குரல்களால் உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இதன் வழியாகவே எமது உரிமைப் போராட்டத்தில் வெற்றிகாண முடியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ். பாஸ்கரா தெரிவித்தார்.
வலி. வடக்கில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் உரையாற்றுகையில்,
ஆறு தசாப்தகாலமாக அகிம்சை வழி மற்றும் ஆயுத வழியில் போராட்டங்கள் நடத்து முடிவுற்ற பின்னர் மீண்டும் எமது தளத்தில் நாம் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் மிகவும் முக்கியமானது. எமது வாழ்வுரிமைகளைப் பெறுவதற்காக போராட வேண்டியுள்ளது. இந்த அரசு போருக்குப் பின்னர் தனக்குக் கீழ் உள்ள நீதியரசர்களின் மூலம் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்திருந்தது.
ஆனால் அதனை இன்னமும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் தனி நபர் தொடர்பான காணிப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர் மீண்டும் இக்காணி அபகரிக்க முடியாது என்ற பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
மாறாக அரசாங்கம் யுத்தத்தின் போது இராணுவ நடவடிக்கைகளுக்காக சுவீகரித்த காணிகளை எக்காலத்திலும் திருப்பிக் கொடுக்காமல் இன்னமும் மேலதிகமாக மக்கள் குடியிருப்புக் காணிகளை சுவீகரித்து வருகின்றது.
இந்நேரத்தில் இலங்கை அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த உண்மையான நல்லிணக்க செயற்பாட்டுடன் செயற்படுவதன் ஊடாகவே நிரந்த சமாதானத்தை அடையும். இதற்கு உதவி செய்ய சர்வதேசம் தயாராகவுள்ளது.
அதேவேளை சர்வதேசத்துடன் இலங்கை இணைந்து செயற்படுவதற்கு இது ஒரு அடையாளச் சின்னமாகவும் அமையப்பெறும். இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என். எஸ். கிருஷ்ணா கற்றுக் கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றித் தெரிவிக்கையில், இலங்கையில் நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு சாதகமான பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது. இது துரிதமாக செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனத் தெரிவித்திருந்தார்.
ஐ.நா.சபையின் செயலாளரின் பேச்சாளர் இது தொடர்பாகத் தெரிவிக்கையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயற்பாடுகளுடன் முன்னேறுகின்றது என தெரிவித்திருந்தார். இப்படியாக இவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் பற்றிக் கூறியுள்ள போதும் அரசாங்கம் இன்னமும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் ஏமாற்றி வருகின்றது.
இதனால் எமது போராட்டம் மூலமாக சர்வதேச நாடுகளில் அழுத்தங்களை உருவாக்கி நாம் வெற்றி பெறவேண்டும். எமது தலைவர் மனோ கணேசன் தாக்கப்பட்ட விடயத்தை தான் ஜனாதிபதிக்கு தெரிவிப்பேன் என ஒரு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அப்படியானால் இலங்கையில் தலைவர்கள் தாக்கப்படுவதும் மக்கள் போராட்டங்கள் செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது உள்ளதா என எண்ணத் தோன்றுகின்றது.
அந்தவகையில் இங்கு நடக்கும் மக்களின் உரிமை போராட்டங்களிலும் ஜனாதிபதிக்கு தெரியவேண்டுமானால் அமைச்சர் ஒருவரை அழைத்து வரவேண்டுமா? நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிடச் சென்ற போது திருப்பி அனுப்பப்பட்டார். இதன் மூலமாக தமிழ் மக்களின் துயரமான சோகமான நிலையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
நாம் போராட்டங்களின் மூலம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றால் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து களப்போராட்டத்தின் மூலமாக எழும் குரல்கள் உலக நாடுகளில் காதுகளில் விழுந்து அதன் மூலம் இலங்கைக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதனூடாக மட்டுமே வெற்றிகாண முடியும் என்றார்.
No comments:
Post a Comment