June 28, 2020

தமிழருக்கென்று ஒரு பூர்வீக தேசம் இங்கு இல்லை! இது விடுதலைப்புலிகளின் தலைவரின் பிரதிபலிப்பு மட்டுமே

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டு மக்களின் மீட்பராக இருக்கின்றார். ஆகவே தான் கொரோனா ஆயிரக்கணக்கில் உயிர் பலி ஏற்படாது தக்க நடைமுறைகளைப்பயன்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடிந்துள்ளது.


அவர் இல்லாது வேறு எவராவது ஆட்சியில் இருந்திருந்தால் நாடளவிய ரீதியில் கொரோனாவால் பல்லாயிரக்கணக்கான மரணங்கள் சிகழ்சிதிருக்கும். ஆனால் இதனை நாட்டில் உள்ள துரோகிகள் ஏற்றுக்கொள்ளாதிருக்கின்றனர் என கிழக்கு மாகாண தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட உள்நோக்கத்திலேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கோருகின்றார்கள். எவ்விதமான பாரபட்சமின்றி ஆட்சியை முன்னெடுக்கும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இருப்பதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாத நிலையில் அதிகாரப்பகிர்விற்கான அவசியம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதே வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். பிரபாகரனே வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்று பிரகடனம் செய்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கான பூர்வீக பிரதேசம் எங்குள்ளது. இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமத்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறிருக்கையில் தமிழர்களுக்கு என்று விசேடமாக பூர்வ பிரதேசமென்ற ஒன்று இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக கொள்ளமுடியாது. கிழக்கிலங்கையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பௌத்த, சிங்கள வரலாற்றுத் தொன்மைகளாகவே காணப்படுகின்றன. அங்கு தமிழர்களுக்கான பூர்வீக பகுதி எங்குள்ளது எனவும், சிங்களவர்களுடன் தமிழர்கள் வாழ்வதற்கு எங்குமே தடைசெய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிங்கள பெரும்பான்மையின படையினராலேயே பாதுகாக்கப்பட்டார்கள். கடந்த காலத்தில் தமிழர்களின் போராட்டக் குழுக்கள் அரங்கேற்றிய படுகொலைகளை மறந்துவிட வேண்டாம்.

அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர்கள் சிங்களப்படையினர்களே. ஆகவே இலங்கையில் தமிழர்களுக்கென்று இல்லாத பூர்வீக பிரதேசத்தை இருக்கின்றது என்று கூறி இனவாதத்தினையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்க முயலவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment