இலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்றழிக்க பட்டுக்கொண்டிருந்த போது “சர்வதேசமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்து குரல்கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள ஈகைப்பேறொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில் “ஈகைப்பேரொளி” முருகதாசன் தியாகமரணமடைந்த நாளான 12-02-2019 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.
மொழி மீதும், மண் மீதும், பற்றுக்கொண்டு தன் இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்த அந்த உன்னத தியாகியின் நினைவு நாளில் நடைபெறும் இந் நிகழ்வில் அனைத்து மக்களும் கலந்துசிறப்பிப்பதே சிறந்த மரியாதையும், அஞ்சலியுமாகும்.
உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம்
பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட
குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா
ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி
அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி
தீக்குளித்தார்.
“7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமானவரே “ஈகைப்பேரொளி” என போற்றப்படும் வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்கள் ஆவார்.
-ஈழம் ரஞ்சன்-
No comments:
Post a Comment