December 19, 2017

திக்குமுக்காடும் தமிழரசுக்கட்சி- குழப்பத்தில் மக்கள்


உள்ளுராட்சி மன்றங்களில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்களை தேர்தல் முடிந்த பின்னரே தீர்மானித்து அறிவிப்பது என்று தான் முடிவு செய்யப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி பொது செயலாளர் கி.துரைராசசிங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை உள்ளக முரண்பாடுகளின் உச்சமாக வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்று மாலை தமிழரசு கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள போதும் மதியவேளை ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டிருந்த எம்.ஏ.சுமந்திரன் ஆனால்ட்டே முதல்வர் வேட்பாளரென்பதை தெரிவித்திருந்தார்.

அதேபோன்று பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் ஆனோல்ட் ராஜினாமா செய்து சமர்ப்பித்திருந்த கடிதம் தொடர்பில் தெரிவித்திருந்தார்.


குறிப்பாக ஆனோல்ட் தெரிவு தொடர்பில் தமிழரசுக்கட்சியிடையே மூண்டுள்ள மோதல்கள் மற்றும் பங்காளிக்கட்சிகளது அதிருப்தியையடுத்து பின்னர் அவ்வறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளை தாண்டி சில்லறைகளிற்கும் குனிந்து நிற்பதிலும் பார்க்க அரசியலே வேண்டாமென்ற நிலைப்பாட்டிற்கு பங்காளிக்கட்சிகள் வந்துள்ளன. கிளிநொச்சியிலும் இணக்கம் காணப்பட்டபடி ஆசனப்பங்கீடு வழக்க முடியாதென தமிழரசுக்கட்சி எம்.பி சிறிதரன் தெரிவித்துள்ளார். புளொட், ரெலோ இரண்டு கட்சிகளிற்கும் தலா 2 வீதம் ஆசனங்கள் வழங்கப்படுவதென இணக்கம் காணப்பட்ட போதிலும், இரண்டு கட்சிக்கும் தலா ஒவ்வொரு ஆசனம் மட்டுமே வழங்கலாமென கூறியுள்ளார்.


இது தொடர்பில் நாளை ரெலோ, மாவை சேனாதிராசா பேச்சு நடக்கிறது. புளொட் இந்த பேச்சில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. ரெலோ- மாவை பேச்சில் இணக்கம் காணப்படாவிட்டால், கிளிநொச்சியில் ரெலோ, புளொட் இரண்டும் போட்டியிடாமல் ஒதுங்குமென இரண்டு கட்சிகளின் உயர்பீடங்களும் முடிவு செய்துள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளே அவசர ஊடக அறிக்கையாக வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment