July 10, 2017

வெளிநாட்டிலிருந்து சென்றவரை சுட்டுக்கொலை செய்த காவற்துறையினர்

வடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற அனர்த்த நிலைமை காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணும், நெல்லியடியில் பொலிஸார் ஒருவரின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என்ற இளைஞனே பலியானார்.

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற போது, தாம் தடுத்தும் நிற்காமல் சென்றதாலேயே கன்ரர் வாகனம் மீத துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 10 நாட்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியிருந்தார்.

இவர் நேற்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு, வல்லிபுரக் கோவிலுக்குச் செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார் என்றும், சட்டவிரோத மணல் ஏற்றும் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment