மக்கள் வாழ்விடங்களை அரச படைகளான இராணுவம் அபகரித்து இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களை வீதியில் மனிதாபிமானமின்றிப் பரிதவிக்க விடுவதுதான் நல்லாட்சியா?
இதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் பதில் சொல்லியாக வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் நில மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் வாழ்விடங்களை மீட்பதற்கான மனிதாபிமான மக்கள் போராட்டம் இன்றைய தினத்துடன் 13 வது நாளாகத் தொடர்கின்ற நிலையில் அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடைய போராட்டத்தில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் அங்கு சென்று போராட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், இந்த மக்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. இந்த மக்கள் தாங்கள் காலங்காலமாக வாழ்ந்த தமது சொந்த வாழ்விடங்களைத்தான் கேட்கிறார்கள். இவர்கள் யாருடைய நிலத்தையும் அடாத்தாக அபகரிக்க முயலவில்லை. இங்குள்ள மக்களின் வாழ்விடங்களை அரச படைகளான இராணுவம் அடாத்தாக அபகரித்துள்ளமையானது தமிழ் மக்களை என்னவும் செய்யலாம் என்ற மன நிலையில் இந்த அரசு இருப்பதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்த மக்கள் வாழ்விடத்தில் காணப்படும் மக்களுக்குரிய ஆரம்ப சுகாதார நிலையத்தையே இராணுவம் அபகரித்து படைமுகாமாக்கியுள்ளமையானது தமிழ் மக்களை மனிதர்களாகவே இந்த அரசு நோக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.
மக்களுடைய சுகாதார நடவடிக்கைகளுக்காக உலக நாடுகள் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்றன பெருமளவு நிதியை எதற்காக வழங்குகின்றன? மக்களுடைய சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தான். ஆனால் இந்த அரசாங்கள் கேப்பாப்பிலவு மக்களுக்குச் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தையே தனது அரச படைகளான இராணுவத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளமையானது தமிழ் மக்களுக்கு சுகாதார மருத்துவ வசதிகள் கிடைக்கக் கூடாது இவர்களை அழிக்க வேண்டும் இவர்களது இனத்தை அழிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இப்போதும் செயற்பட்டு வருவதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
எமது மக்களுடைய வாழ்விடங்களை அரச படைகளான இராணுவத்தைப் பயன்படுத்தி இராணுவ முகாம்களையும் இராணுவக்குடியிருப்புக்களையும் அமைத்து அபகரித்துக்கொண்டு வெளியில் பகட்டாக நல்லிணக்கம் பேசுவதால் என்ன பயன் ஏற்படும்?
தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை அபகரித்து மக்களை வீதியில் பரிதவிக்க விடும் ஆட்சிதான் நல்லாட்சியா? இதைத்தான் நல்லாட்சி என்று நாகூசாமல் சொல்கிறீர்களா? இந்த மக்களின் அவலங்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் உரிய பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த மக்கள் இன்றுடன் பதின்மூன்றாவது நாளாக இந்த இடத்தில் தமது குழந்தை குஞ்சுகளுடன் பரிதவித்து நிற்கின்றார்கள். இதனை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கருத்திலும் எடுக்காமல் கண்மூடி இருக்கின்றார்கள். இவர்கள் தமிழர்கள் என்பதாலா இந்த மக்களின் இந்த நிலை உங்கள் கவனத்திற்கு வரவில்லை? இதற்கு இந்த ஆட்சியாளர்கள் தகுந்த பதிலளிக்க வேண்டும். இந்த மக்களின் வாழ்விடங்களை உடனடியாக விடுவித்து இந்த மக்களும் நிம்மதியாக வாழ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை கருத்திற்கொள்ளாது அரசு தொடர்ந்தும் கண்மூடி இருக்குமாகவிருந்தான் இதனால் ஏற்படவுள்ள விளைவுகள் அனைத்துக்குமான முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment