உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கிய
சிங்கள,இந்திய அதிரடிப்படையினரை
துவசம் செய்த புலிகள்.!! (நேற்றைய தொடர்ச்சி)
ஈழத்து துரோணர்.!!
*****************************
இந்திய இராணுவத்தின் நயவஞ்சகத்தால் எம் தளபதிகளை இழந்ததினால் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் போர் மூளும் அபாயத்தை உணர்ந்த இந்திய இராணுவத்தளபதி திபீந்தர் சிங் அவசர உரையாடல் ஒன்றிற்காக புலிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு இனங்கள் 08/10/1987அன்று உலங்கு வானூர்தியில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கினார். அப்போது அந்த பிரதேசம் முழுவதும் புதிய ஆயுதம் தரித்த புலிகளின் பாதுகாப்பை கண்டதும் இந்திய தளபதிகள் திகைத்திருப்பர்.
காரணம் அதுவரை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு வெறும் கைகளுடன் உலாவிய புலிகளை தான் அவர்கள் கண்டிருந்தனர். அங்கிருந்த புலிகளின் முகத்தில் கோபம் குடிகொண்டிருந்தது. யாரும் இவர்களை வரவேற்று உபசரிக்கவும் இல்லை புன்னகைக்கவும் இல்லை.
இதனை நான் பதிவு செய்வதற்கு காரணம் இந்திய இராணுவம் எம் மண்ணிற்கு வந்தபோது புலிகளும் அவர்களுடன் மிகவும் அன்னியோன்னியமாகவே பழகினர். இது எமக்கே உரிய பண்பாடு. ஆனால் எமக்கு துரோகம் செய்து பகையானால் பாவ புண்ணியம் பார்க்க மாட்டார்கள் தமிழர்கள். கொண்ட கொள்கைக்காக சாகத்துணிந்த புலிகளுக்கு, இவர்களின் வஞ்சக நட்பை தூக்கி எறிந்தது இயல்பே.
வந்திறங்கிய தளபதிகளை, அன்றைய நேரத்தில் இந்திய இராணுவத்துடன் புலிகள் தரப்பில் உரையாடிய திரு.மாத்தையா, அவர்களை வரவேற்று புலிகளின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
உண்மையில் இந்திய இராணுவத்தளபதிகள் அங்கு வந்ததன் நோக்கம் புலிகளை பயமுறுத்தி பணியவைப்பது. அடுத்தது கொக்குவில் பிரம்படியில் தான் அன்றைய நேரத்தில் தலைவரின் முகாம் இருந்தது. அங்கு தலைவர் இப்போதும் இருக்கின்றாரா என்று உறுதிப்படுத்துவதே இவர்களின் இரண்டாவது நோக்கம்.
பேச்சுவார்த்தை பலனளிக்காது போனமையால் தளபதிகள் முகாம் திரும்பினர். இது நடந்து அடுத்த நாள் 9ம் திகதி இரவு 30பேர் கொண்ட சீக்கிய அதிரடிப்படை அணியொன்று கொக்குவில் பிரம்படியில் அமைந்திருந்த தலைவரை இலக்கு வைத்து இரவோடு இரவாக நகர்வொன்றை மேற்கொண்டனர். பின் என்ன காரணத்தாலோ அந்த திட்டத்தை கைவிட்டு முகாம் திரும்பினர்.
இந்த நகர்வு பற்றி அறிந்த புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் இலக்கு தலைவர் என்பது தெரிந்து விட்டது. அதன் பின்னர் இந்திய இராணுவத்தின் அடுத்த நகர்வு ஆகாய மார்க்கமாகவே இருக்கும் என்பதை கணித்த புலிகள், அதற்கான இடத்தை யாழ் பல்கலைகழக மைதானமாகவே இருக்கும் என்பதையும் முன்னமே ஊகித்து அதற்கு ஏற்றால் போல தம்மை தாயார் படுத்தி, இவர்களின் வரவுக்காக காத்திருந்தனர்.
இதையறியாத இந்திய கொமாண்டோக்கள் தமது தளபதியின் திட்டத்தில் இருந்த நம்பிக்கையில் வெற்றி களிப்பில் மிதந்தனர்.
அந்த நேரத்தில் இந்திய இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய தளபதி திபீந்தர் சிங் தலைவரை கொன்றோ அல்லது கைது செய்ததும் இரண்டு நாளில் தாக்குதல் நிறைவு பெற்றிடும் என்று உரையாற்றியதாக தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தான் போட்ட அன்றைய திட்டம் இராணுவ கோட்பாடுகளின்படி மிகவும் துல்லியமான திட்டம் என்பதை இராணுவ வல்லுனர்கள் ஒப்புக்கொண்டதாக அந்த புத்தகத்தில் சுட்டிக்காட்டியதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.
சாதாரண இராணுவ அமைப்புக்கான திட்டமெனில் அது சிறப்பான திட்டமே.
ஆனால் 16வயதில், தனி ஒருவனாக போராட்டத்தை ஆரம்பித்து மிக நுணுக்கமாகவும், எச்சரிக்கையாகவும் தலைமறைவு வாழ்கையை மேற்கொண்டு, தன்னை போலவே எந்த நேரத்திலும் சாவதற்கு துணிந்து,கழுத்தில் நஞ்சுடன் திரியும் ஒரு தலைவனையும் போராளிகளையும் கொண்டது புலிகளமைப்பு என்பதை இவர்கள் மறந்து விட்டனர்.
சிறுக சிறுக தாக்குதல்களை மேற்கொண்டு அதன் தோல்வி, வெற்றிகளில் பாடங்களை கற்று சிறந்த இராணுவ மதிநூட்பத்துடனிருந்த தலைவனையும், தளபதிகளுடன் மோதப்போகின்றோம் என்பதை மறந்து சில நூறு சாரம் கட்டிய புலிகள் என குறைவாக மத்திப்பிட்டே இந்த தாக்குதலுக்கு ஆயத்தமாகினர்.
எதிரியை குறைவாக மதிப்பிட்டதன் பாரிய அடியே இந்த தாக்குதல்.
திட்டத்தின் படி நான்கு MI-8 துருப்புகாவி உலங்கு வானூர்தியில் 100பேர் கொண்ட 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 – Sikh Light Infantry) பரசூட் மூலம் தரையிறக்குவது. அவர்கள் அங்கிருக்கும் புலிகளை அழித்து நிலையெடுத்ததும்.
இந்திய இராணுவத்தின் சிறப்பு படையணியின்100 பேர் கொண்ட பராக் கொமாண்டோக்கள் (Para Commandos) அந்த இடத்தில் தரையிறங்கி பல்கலைக்கழகத்தில் இருந்து அரை மைல் தூரத்தில் இருந்த கொக்குவில் பிரம்படியில் அமைந்திருந்த தலைவரின் இருப்பிடத்தை முற்றுகையிட்டு அவரை கொல்வது அல்லது கைது செய்தபின் வந்தவழியே வந்து உலங்குவானூர்தி மூலம் தளம் திரும்புவதே திட்டம்.
இரண்டு நாளில் போர் முடிந்துவிடும் என்னும் குருட்டு நம்பிக்கையில், ஜெய்கிந் கோசத்துடன் புறப்பட்ட கொமாண்டோக்கள் 1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி.நேரம்: அதிகாலை 1 மணி. கரும் இருட்டுக்கு மத்தியில் பரசூட் மூலம் குதித்தனர்.
தங்களுக்கான புதைகுழியை புலிகள் வெட்டிவிட்டு காத்திருப்பது தெரியாமல் குதித்த இந்திய கொமாண்டோக்கள் மீது, அந்த நேரத்தில் காவல்கடமையில் இருந்த மேஜர்.குகதாஸ் அண்ணை (1991ம் ஆண்டு ஆனையிரவு தாக்குதலின்போது வீரச்சாவடைந்தவர்) பரசூட் மூலம் குதிப்பதைக்கண்டு தனது AK-MS மூலம் இவர்களை நோக்கி தனது தாக்குதலை ஆரம்பித்தார்.
அதனைத்தொடந்து ஏனைய புலிகளும் உசாரடைந்து தாக்குதலில் இறங்கினர்.
இதில் இரண்டு வானூர்திகள் சேதமாகி திரும்பி சென்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் பரசூட் மூலம் குதித்த இராணுவத்தினரில் 20க்கு மேற்பட்டவர்கள் உயிரற்ற சடலமாகவே வந்து தரையை தொட்டனர்.
உயிருடன் தரையை தொட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. காரணம் கொமாண்டோக்கள் தரை இறங்கும் போது தங்களுடன் கொண்டுவரும் "கொமாண்டோ சவள்" கிடங்கு கிண்டி அந்த மண்ணை தம்முடன் கொண்டுவரும் சாக்கில் போட்டு மூட்டை கட்டி முன்னாள் வைத்து கிடங்கில் இருந்தே தாக்குதல் மேற்கொள்வார்கள்.
ஆனால் அந்த பிரதேச மண் மிகவும் கடினமானது வெட்டுவதற்கு சிரமம். கற்பாறைகளுடன் கூடிய கடினமான மண் தரை என்பதால் அது முடியாது போனமையால் தரை இறங்கியவர்களும், அந்த தாக்குதலுக்கு இலக்கானார்கள்.
இரவில் இந்த தரை தாக்குதல் நடந்தமையால் 29பேர் மரணமடைய அதற்கு மேல் படுகாயமடைந்தபடி, மேலதிக உதவி பெற்று தப்பி சென்றனர். இதில் மரணமடைந்தவர்களில் தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி மேஜர் பீரேந்திர சிங்கும் ஒருவர்.
இந்த தாக்குதல் தோல்விக்கு முக்கிய காரணம் புலிகள் பற்றிய பிழையான மதிப்பீடேயாகும்.
இந்த தாக்குதலை பொட்டம்மான் வழிநடத்தினார். இவருடன் லெப்.கேணல். மதியண்ணை லெப்.கேணல்.சராண்ணை மேஜர்.கோணேஸண்ணை, ஜவானண்ணை, போன்றவர்களும் பங்கு பற்றினர்.
இந்த தாக்குதலின் பின் புலிகள் மீதான, இந்திய இராணுவ கோட்பாடு நிச்சயம் மாற்றப்பட்டிருக்கும்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சினிமாவில் வரும் வில்லன்கள் போலவே புலிகளை எண்ணியே இந்த திட்டத்தை போட்டு தலைவரை பிடிக்க வந்தனர்.
ஆனால் அதற்கு முன்னமே தலைவரை பாதுகாப்பாக தென்மராச்சிக்கு நகர்த்தியிருந்தனர் புலிகள். அவருடன் தளபதிகளான பாண்டியண்ணை , இம்ராண்ணை , சொர்ணமண்ணை, கடாபியண்ணை போன்றவர்களுடன் ஒரு அணியொன்று பாதுகாப்புடன் சென்றிருந்ததனர்.
தென்மராச்சியில் வைத்து மேலதிக பாதுகாப்பை தமிழ்செல்வண்ணை, குணாண்ணை, கப்டன்கில்மன், பரணி, வீமன் போன்றவர்கள் பாதுகாத்து, ரகசியமாக வன்னிக்கு அனுப்பி வைத்தனர்.
இப்படி இந்த தாக்குதல் முறியடிக்க பட்டபோதும், இந்த தாக்குதலின் போது அம்மானுக்கு கடும் காயம் ஏற்பட்டிருந்தது. அவரை பாதுகாக்க மிகவும் கடும் பிரையத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அம்மானை இலக்கு வைத்தே சில கொமாண்டோ தாக்குதலை இந்திய இராணுவம் மேற்கொண்டது. அதை எழுதினால் அதுவே ஒரு தனிப்பதிவாக மாறிவிடும்.
இந்த இரு தாக்குதலுமே இரண்டு நாடுகளுக்கும் ஒன்றை உணர்த்தி இருக்கும் தாங்கள் மோதியது போர்க்கலையில் சாணக்கியம் மிக்க போராளிகளுடன் என்பதை தெளிவுபடுத்தியிருக்கும். புலிகளின் போர் உத்திகளை சாதாரண இராணுவ கோட்பாடுகளுக்குள் அடக்கிவிட முடியாது. அவர்கள் அதற்கு அப்பாற்பட்டவர்கள். அதனால் தான் உலகே திரண்டு எம்மை எதிர்த்தது.!
பெருமைகளுடன் துரோணர்.!!






No comments:
Post a Comment