வடமாகாணத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கென வந்த நிதியை அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்பட்டு ஆசிரியர் மாநாடு என்ற போர்வையில் தமது பொக்கெற்றுக்களுக்குள் சுருட்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விடயம் பற்றி அவர் குறிப்பிடுகையில்,
வட மாகாண கல்வி அமைச்சற்சு, யுனிசெப் போன்ற நிறுவனங்களின் நிதியில் இருந்து ஆசிரிய மாநாடுகள் நடாத்தப்படுகின்றது. இது கிடைக்கும் பணத்தை பிரித்து அதிகாரிகள் பொக்கற்றில் போடுவதற்கான செயல்.
அதாவது ஆசிரிய மாநாடு என்ற பெயரில் மாணவர்களிற்கு வந்த காசைப் பிரித்து அதிகாரிகள் பொக்கற்றில் போடுகின்றனர் .
வட மாகாணத்தினைப் பொறுத்த மட்டில் கல்வி அமைச்சர் , செயலாளர் , வலயக் கல்விப் பணிப்பாளர் அனைவரும் உள்ளனர் ஆனால் இங்கு ஒரு வகையிலும் ஜனநாயகம் இல்லை. இவர்கள் யாருடனும் பேசுவதும் இல்லை. மாகாணச் செயலாளர் , பணிப்பாளர் போன்றோர் தமக்கு தேவையானதைச் செய்கின்றனர்.
ஆசிரியர் சங்கங்களுடன் கூடப் பேசுவது கிடையாது.
இதை நிறுத்த வேண்டும். இவை தொடர அனுமதிக்க முடியாது. இவர்கள் தமக்குத் துணைபோகும் சில பொம்மைகளை வைத்து தமக்கானதை சாதிக்க முயல்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
இலங்கை ஆசிரிய சங்கம் தமிழ் மக்களிற்காகவும் உரிமைக்கு குரல்கொடுக்கும் ஓர் சங்கம . நாம் 1977ம் ஆண்டே தமிழ் மக்களின் சுய நிர்ணய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்காகவும் குரல்கொடுத்து வருகின்றோம்.
வட மாகாண கல்வி அமைச்சில் பல மோசடிகள் உள்ளபோதும் கல்வி அமைச்சர் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் எமது பலமான ஆர்ப்பாட்டத்தினால் துணுக்காயில் மட்டும் வலயக் கல்விப் பணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ஆனால் நடவடிக்கை இல்லை.
இதேபோன்று வவுனியாவில் பல அதிபர்கள் மோசடியில் ஈடுபட்டனர் . அதுவும் குறிப்பாக மாணவர்களின் உணவில் களவெடுத்தனர். இதற்கும் எந்தவிதமான நடவடிக்கைகளும் கிடையாது. எனவே வடமாகாண மோசடிகளை கட்டடுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நாம் அனைவருக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுப்போம். என்றார்.

No comments:
Post a Comment