கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில், அனுமதியற்றமுறையில் தென்பகுதி கம்பனி ஒன்றினால் ஹொட்டல் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உட்பட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த பகுதியில் உள்ள காணியில் தென்பகுதி கம்பனி ஒன்று (களுதொட்ட பினான்ஸ்) சுமால் 20 ஏக்கரில் கட்டடம் அமைத்து வருகின்றது. குறித்த பகுதியில் ஹொட்டல் ஒன்று அமைப்பதற்காக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அனுமதி கிடைக்காத போதும் கட்டட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பூநகரி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் ஹொட்டல் அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டதாகவும், ஹொட்டல் ஒன்று அமைப்பதற்கான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாமையால் அனுமதி வழங்க முடியாத நிலை காணப்பட்டதாக பிரதேச சபை செயலாளர் குறிப்பிடுகின்றர்.
அனுமதி பெறப்படாமல் கட்டடம் அமைக்கப்பட்டு வரும் விடயம் தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலிற்கமைய இவ்வருடம் 2ம் மாதமளவில் நிறுத்துமாறு வலியுறுத்தி செயலாளரினால் கடிதம் அனுப்பப்பட்டதாகவும், தொடர்ந்தும் கட்டப்பட்டு வருவதால் சம்மந்தப்பட்ட தரப்பிற்கு சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதக பூநகரி பிரதேச செயலாளர் குறிப்பிடுகின்றர்.
இதேவேளை, குறித்த பகுதியில் கட்டடம் அமைக்கப்பட்டு வருவதும், மக்களின் காணிகளை சுவீகரிப்பதும் தொடர்ந்து வருவதாகவும், இந்நிலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர்.

No comments:
Post a Comment