April 16, 2016

தமிழீழ தனியரசை கோருகிறார் சீ.வி-சிங்கள ஊடகம்

வட-கிழக்கு மாகாணங்களை இணைத்து தனிநாடொன்று உருவாக்கப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் இரண்டு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு நாடும், இலங்கையின் ஏனைய ஏழு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இன்னொரு நாடும் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கிழக்கில் முஸ்லிம் வாழும் பிரதேசங்கள் மற்றும் மலையகத் தமிழர் வாழும் பிரதேசங்கள் தனியான சுதந்திர நிர்வாகப் பிரிவுகளாக உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்குறித்த தனது முன்மொழிவுகளை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கையளித்துள்ளார்.

வடக்கும், கிழக்கும் தனியான நாடாக வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள அவர், அப்பிரதேசத்தில் ஆட்சி மொழியாக தமிழ் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், தமக்கு பொலிஸ் அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment