விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடன் உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும். இவ்வாறு தமிழர் தேசிய இயக்க நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தேசிய இயக்க நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை சந்திக்க இன்று அவினாசி சென்றார்.
முன்னதாக அவர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
அத்திக்கடவு அவினாசி திட்ட பிரச்சினையில் பவானி ஆற்றில் உற்பத்தியாகும் நீர் 30 டி.எம்.சி. வீணாக கடலில் கலக்கிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு போய் விட்டன.
நிலத்தடி நீரும் 1000 அடி வரை வறண்டு விட்டன. அவினாசி திட்டதை நிறைவேற்றினால் 50 அடி ஆழத்தில் நீர் கிடைக்கும். 500 கிலோ வாட் மின்சாரமும் நமக்கு கிடைக்கும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரூ.120 கோடியில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டது.
அதன்பின்னர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்த போது இத்திட்டத்தை கைவிட்டது. தற்போது இத்திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கூறுகிறார்கள்.
அவினாசி அத்திக்கடவு திட்டதை எந்த அரசு வந்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேற்ற வாக்குறுதி அளிக்க வேண்டும்.
கடந்த முறை இலங்கை தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தால் தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதே நிலைமையைதான் இந்த கட்சிகள் சந்திக்கும்.
வெளிநாடு வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் கூறும் போது இலங்கை அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக கூறியுள்ளது.
ஆனால் இந்திய அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக இன்றும் அறிவிக்கவில்லை. இறந்து விட்டார் என்றால் இந்திய சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யவேண்டும். அதற்காக இந்திய அரசு அதனை மறைத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடன் உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment