November 19, 2015

பரிஸ் தாக்குதல் சூத்திரதாரி கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு

கடந்த வெள்ளிக்கிழமை பரிஸில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஐ.எஸ் அமைப்பின் அப்தெல்ஹமீத் அபாவூத் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பரிஸின் புறநகரான செய்ன்ட் டெனிஸில் உள்ள குடியிருப்பு பகுதியொன்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தீவிரவாதிகள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொலிஸாரும் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின்போது, இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப்பேர் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவராகவே அப்தெல்ஹமீத் அபாவூத் இருந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரைக் கண்டுபிடிக்கும்பொழுது அவரின் உடலில் தோட்டாக்கள் மற்றும் சில காயங்கள் என்பன இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவரின் கைரேகையை வைத்தே அபாவூத் என தாம் உறுதி செய்துகொண்டதாகவும் பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களில் 130க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன், 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது

- See more at: http://athavanworld.com/?post_type=post&p=249182#sthash.XW6nOXTF.dpuf

No comments:

Post a Comment