நவ்று தீவில் உள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 600 புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் இந்த வாரத்துக்குள் பரிசீலிக்கப்படும் என்று நவ்று அரசு அறிவித்துள்ளது. இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் இனிமேல் நவ்று தீவு எங்கிலும் சுதந்திரமாகச் சென்றுவரக் கூடிய விதத்தில் அது திறந்த முகாமாகும் என்றும் நவ்று அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஏ.எப்.பி.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஆஸ்திரேலியாவுக்குப் படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் செல்லும் இலங்கையர்கள் உள்ளிட்ட ஆசியாவைச் சேர்ந்தவர்களை அந்த நாட்டு அரசு தனது பிராந்தியமான நவ்று தீவிலுள்ள அகதி முகாம்களில் தடுத்து வைக்கும். இங்கு பலர் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும் செயல்முறை நவ்றுவுக்கு ஒரு மைல்கல் என அந்தநாட்டு நீதி அமைச்சர் டேவிட் அடேங் தெரி வித்துள்ளார். இந்தத் திட்டம் கருணையுடையது. இதனைச் செய்வதற்கான எண்ணம் எப்போதோ எமது அரசிடமிருந்தது முகாம்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களைச் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதற்கு ஆஸ்திரேலியா ஆதரவு வழங்குகிறது. பொலிஸ் மற்றும் சுகாதார வசதிகளை அந்த நாடு எமக்கு வழங்கியுள்ளது. அத்துடன் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவிட சமூக நலன் அதிகாரிகளின் எண்ணிக்கை 135 இலிருந்து 320 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என நவ்று நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நவ்றுவின் இந்தச் செயற்பாட்டை ஆஸ்திரேலிய அரசு வரவேற்றுள்ளதுடன் தொடர்ந்தும் தமது ஆதரவு நவ்றுவுக்குக் கிடைக்கு மெனவும் குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிடம் புகலிடம் கோரி வருவோரை நாட்டுக்கு வெளியே தடுத்துவைக்கும் கொள்கைக்கு எதிராக அந்தநாட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக் கொன்று விசாரிக்கப்படச் சில நாள்கள் உள்ள நிலையில் நவ்றுவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

No comments:
Post a Comment