பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் தீர்வுத் திட்டங்களை வழங்கத் தவறியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் யுத்தக் குற்றச் செயல் விசாரணை அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்த போதிலும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில் ஏழு மாதங்களுக்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்தனர் எனவும், அந்த நம்பிக்கையை அரசாங்கம் பாதுகாக்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பில், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றை இந்த அரசாங்கமும் உரிய முறையில் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழுவினரை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்காமை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன இலங்கையில் தகவல்களை திரட்டுவதற்கு அனுமதிக்காமை ஆகியனவற்றுக்கு அரசாங்கம் உரிய காரணங்களை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை.
கடந்த அரசாங்கங்களைப் போன்றே, இந்த அரசாங்கமும் சர்வதேச விசாரணைகளை திட்டமிட்ட வகையில் சிதைக்கும் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment