July 09, 2015

புதிய முள்வேலிகளை அமைக்கும் இராணுவத்தினர்

புதிய முள்வேலிகளை அமைக்கும் இராணுவத்தினர்-  தமிழில் குளோபல் தமிழ் செய்திகள்


இலங்கையின் மோதலால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பல வருடங்களிற்கு பின்னர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாலசுந்தரம் இராசமலர் எதிர்பராத பிரச்சினையொன்றை எதிர்கொண்டார்.


அவரது வீட்டின் மலசலகூடம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  பகுதிக்குள் காணப்பட்டதே  அந்த பிரச்சினை.


இலங்கை இராணுவம் தனது ஆக்கிரமிப்பின் கீழிலிருந்த பகுதிகளை இவ்வருடம் அதன் உரிமையாளர்களிடம் மீள ஓப்படைக்க தொடங்கியுள்ளது.


இலங்கை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்ட பின்னரே இது இடம்பெற ஆரம்பித்துள்ளது. சிறுபான்மை இனத்தவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்தவர்  சிறிசேன


எனினும் நிலங்களை விடுவிக்கும் நடவடிக்கை புதிய எல்லைகளை உருவாக்கியுள்ளதுடன்,சமூகங்களை பிளவுபடுத்தியுள்ளது. புதிய பதட்டங்களை உருவாக்கியுள்ளது.


எங்களிற்கு எங்களுடைய நிலம் மீண்டும் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் இராசமலர் வறுத்தவிளானை சேர்ந்த 53 வயதான இவர் 1990 இல் அவரது ஊரிலிருந்து  இடம்பெயர்ந்தார்.


நாங்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து  வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.


விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையிலான மோதலின் மையப்பகுதிகளில் ஓன்றாக விளங்கிய  பலாலி இராணுவமுகாமிற்கு தென்பகுதியில் உள்ள அவரது கிராமத்தில் 1990 இல் 10.000 பேர் வாழ்ந்தனர்.


இராசமலர் போன்ற பலர் அதன் பின்னர் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.இவர்களில் 1200 பேர் மீண்டும் தங்கள் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

ஆனால் அந்த அனுபவம் அவர்களை பொறுத்தவரை கசப்புநிறைந்த இனிப்பான அனுபவமாகவே காணப்படுகின்றது. அந்த பகுதியில் உள்ள அனைத்தும் வீடுகளிலும், கோவில்களிலும் மோதல்கள் இடம்பெற்ற அடையாளங்களை காணமுடிகின்றது.


மேலும் அந்த கிராமத்திற்கு திரும்பியவர்களில் ஓரு  சிலரிற்கே அவர்களது சொத்துக்கள் முழுமையாக கிடைத்துள்ளன.


இராசமலரின் அயல்வீட்டில்  வசிப்பவர்pற்கு அவரது கிணறு மாத்திரம் முழுமையாக கிடைத்துள்ளது,ஆனால் அவரது வீடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் சிக்குண்டுள்ளது.


அதேகிராமத்தைசேர்ந்த இன்னொருவரின் கிணறு இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் காணப்படுகின்றது.


இவ்வருடம் அரசாங்கம் நிலங்களை மீள ஓப்படைக்க தொடங்கிய வேளை மக்கள் நம்பிக்கையுடன் காணப்பட்டனர் என தெரிவிக்கும் கிராமத்தலைவர் சுகிர்தன் யுத்தம் முடிவடைந்த பின்னரும் இராணுவம் நிலங்களை ஆக்கிரமித்துவைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என்கிறார்.


இராணுவம் இவ்வருடம் மார்ச் மாதம் 600 ஏக்கரை விடுவித்தது ஆனால் 40 ஏக்கரை மீள எடுத்துக்கொண்டது என தெரிவிக்கும் அவர் புதிதாக இராணுவத்தால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகளை காண்பித்தார்.


இந்த புதிய வேலிகள் காரணமாக நான்கு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாதையை பயன்படுத்துவதற்கு அவர்கள் 50 கிலோமீற்றர் நடக்கவேண்டியுள்ளது.


இந்த இராணுவேலிகளிற்குள் சீருடையணிந்த அணியாத இராணுவத்தினரை காணமுடிகின்றது.


விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர் இராணுவத்தினர் வடபகுதியில் உள்ள பெருமளவு நிலத்தை கையகப்படுத்தினர். அவர்கள் அங்கு ஹோட்டல்கள், சுற்றுலாப் பயணிகளிற்கான விடுதிகள் போன்றவற்றை உருவாக்கினர்.பயிர்ச்செய்கையினை மேற்கொண்டு  தாங்கள் எந்த மக்களின் காணிகளை கையகப்படுத்தினரோ அவர்களிற்கே அதனை விற்றனர்.


இராணுவத்தினர் தாங்கள் கையகப்படுத்திய நிலங்களில் 12 ற்கும் மேற்பட்ட ஹோட்டல்களை நடத்துகின்றனர் என்கிறார் சுகிர்தன்.


இராணுவத்தினரின் பிடியிலிருந்த நிலங்களை மீள ஓப்படைத்துவருவதற்காக ஜனாதிபதி சிறிசேன பாராட்டுகளை பெற்றுள்ளார்.


அதேவேளை முழுமையான இயல்பு நிலையை ஏற்படுத்தவும்,நல்லிணக்கத்தை ஏற்படுத்துவும் மேலும் நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்துவருகின்றது.


தன்னுடைய ஜனநாயக சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்காக சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலிற்கு உத்தரவிட்டுள்ளார்.


யாழ் அரசாங்க அதிபர் வேதநாயகம்  நல்லிணக்கத்திற்கு இவ்வாறான மீள்குடியேற்றம் அவசியம் என்கிறார் .பாதுகாப்பு படையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் காலப்போக்கில் மேலும் நிலங்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.


முகாம்களிலிருந்து தங்கள் நிலங்கள் அமைந்திருக்கும் பகுதிக்கு செல்பவர்களிற்கு தற்காலிக கூடாரங்களை வழங்குமாறு தான் ஐக்கிய நாடுகள் அமைப்பினை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


தான் இந்த மாதம் ஊரிற்கு திரும்பியவேளை தன்னுடைய பகுதியை அடையாளம் காணமுடியாமல் தடுமாறியதாக தெரிவிக்கின்றார்  இராசம்மா,அவரது கூரையற்ற வீடு முட்கம்பிவேலிக்கு அருகில் காணப்படுகின்றது.


1990 இல் செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டில் சில மாதங்களே வாழ்ந்ததாக அவர் தெரிவிக்கின்றார்,ஆறு மாதங்களிற்கு பின்னர் மீண்டும் யுத்தம் வெடித்தது, இராசம்மாவின் பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்தனர்.


எனது புது வீட்டில் என்னால் வாழமுடியாமல் போனது குறித்து நான் கவலையடைகிறேன்,எனக்கு நான்கு  பேரப்பிள்ளைகள் உள்ளனர், அவர்களாவது இங்கு நிம்மதியாக வாழ்வார்கள் என ஆசைப்படுகிறேன் என்கிறார் அவர்.

No comments:

Post a Comment