விடுதலைப்புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக நான் பங்கெடுத்திருந்த பேச்சுவார்த்தைகளின் போது சிறிலங்கா அரசாங்கம் ஆடிய கபடநாடங்களை நன்கு அறிந்து வைத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் புதிய விடயமல்ல எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இரகசியாக நடைபெற்றதாக கூறப்படுகின்ற லண்டனில் பேச்சுவாத்தைகள் குறித்து கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகையொன்று பிரதமர் வி.உருத்திரகுமாரன் வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
செவ்வியின் முழமையான தமிழாக்கம் :
கேள்வி : தற்போதைய லண்டன் பேச்சுக்களால் அதிகம் நன்மை அடையப்போவது யார்?
பதில் : ஈழத்தமிழர் தேசத்தின் தேசய இனப்பிரச்சினை தொடர்பாகவும், உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாகவும், உத்தியோபூர்வமாகவும் உத்தியோகபூர்வமற்ற வகையிலும் அரசியல் அமைப்புக்கள் பேச்சுக்களை நடாத்தவது ஒன்றும் புதிய விடயமல்ல. விடுதலைப்புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக நானும் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் முன்னர் பங்கு கொண்டிருக்கிறேன்.
அவ்வேளை பேச்சுவார்த்தைகளின் ஊடாக சிறிலங்கா அரசாங்கங்கள் ஆடிய கபடநாடகங்களையும் நான் நன்கு அறிந்தும் வைத்துள்ளேன்.
பேச்சுக்களின் போது பேசப்படும் விடயங்கள் மட்டுமன்றி, பேச்சுக்கள் நடாத்தப்படும் காலம், பேச்சுக்களில் ஈடுபடும் தரப்புகளின் நோக்கம், பேச்சுவார்த்தைளில் ஈடுபடுவதனால் கூடுதல் நன்மைகளை அடைந்து கொள்ளப் போகின்றவர் யார் போன்றவையெல்வாம் பேச்சுவார்த்தை விவகாரங்களில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்களாகும். தமிழர் தரப்பில் பேசும் எவரும் தமிழ் மக்களின் நலன்கள் என்ற நோக்குநிலையில் இருந்துதான் பேச்சுவார்த்தையைக் கையாள வேண்டும்.
இவ் அடிப்படையில் நோக்கும் போது, நடைபெற்று முடிவுடைந்த லண்டன் பேச்சுவார்த்தை தொடர்பாக கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன.
இதற்கான காரணங்களை பின்வருமாறு வகைப்படுத்துகிறேன்.
பேச்சுவார்த்தை நடந்த காலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்பித்த அனைத்துலக விசாரணையை, அனைத்துலக நிபுணத்தவ உதவியுடனான உள்ளக விசாரைணப் பெறிமுறையாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசு எடுக்கும் முயற்சிக்கு, அனைத்துலக அரசுகள் ஆதரவு வெளிப்படுத்துமொரு கால கட்டமாக இருந்திருக்கிறது.
இதற்கான ஆரம்பகட்ட நிதியும் ஐ.நாவால் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழர் தரப்பின் சம்மதத்துடனும்தான் உள்ளகப்பொறிமுறை கொண்டுவரப்பட்டது எனப் பலரையும் நம்ப வைப்பதற்குப் இப் பேச்சுவார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய அனைத்துலக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யார் என்பதனையே பேச்சுக்களில் ஈடுபட்டுவர்கள் மறைக்கும் போது, அவர்கள் வெளிப்படையாகக் கூறும் விடயங்கள் மட்டும்தான் பேசப்பட்டது என நம்புவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. இதனால் இப் பேச்சுக்களின் நோக்கம் தொடர்பாக சந்தேகம் எழுகிறது.
மக்களின் அன்றாடப் பிரசினைகளைத் தீர்ப்பது குறித்துப் பேசுவதற்கு தாயத்திலேயே ஏராளம் விடயங்கள் உள்ளன. பிரதிநிதிகளும் உள்ளனர். இதனை விடுத்து புலம்பெயர் அமைப்புடன் பேச முற்படுவது புலம்பெயர் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் உரிமை அரசியலை பலவீனப்படுத்தம் முயற்சியா என்ற கேள்வியனை எழுப்புகிறது.
தற்போதய சிறிலங்கா அரசாங்கம் மிகவும் தற்காலிகமானதொரு அரசாங்கமாகும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாம். அநேகமாக செம்படம்பர் மாதம் புதிய அரசாங்கம் அமையலாம். இந்தத் தற்காலிக அரசாங்கத்துடன் நீண்ட காலம் எடுக்கும் திட்டங்கள் தொடர்பாக பேச்சக்கள் நடாத்தி தமிழர் தரப்புக்கு காரியம் ஏதும் ஆகப் போதில்லை. இருந்தும் அவசர அவசரமாக இப் பேச்சுக்களை நடாத்த வேண்டிய தேவை தமிழர் நலன்பாற்பட்டதுதானா என்ற கேள்வி எழுகிறது.
இப் பேச்சுக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் உலகத் தமிழர் பேரவையினதும் உத்தியோகபூர்வமான முடிவின் அடிப்படையில் இடம்பெற்றவையா அல்லது பேச்சுக்களில் பங்கு பற்றியவர்களின் தனிப்பட்ட முடிவா? ஏன்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது.
அதனால் இது தொடர்பாக தங்கள் அமைப்பின் நிலைப்பாட்டை உரிய அமைப்புக்கள் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனக் கோருகிறோம். இது உத்தியோபூர்வ முடிவானால் இப் பேச்சினை நடாத்தியதற்கான காரணங்களையும் பேச்சுகளில் பேசப்பட்ட விடங்களையும் உத்தியோபூர்வ அறிக்கையாக மக்கள் மத்தியில் வைக்குமாறும் நாம் கோருகிறோம்.
கேள்வி : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஏன் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கவில்லை ?
பதில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சிறிலங்கா அரசாங்கம் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. அரசியல் தீர்வு தொடர்பாக தனிநாடு உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பு, தமிழின அழிப்புக் குற்றத்துக்காக சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துதல், புலம்பெயர் மக்கள் தாயக மேம்பாட்டில் பங்கெடுப்பதற்கு உகந்தவொரு அனைத்துலகப் பொறிமுறை உருவாக்கப்படுவதன் அவசியம் போன்ற நிலைப்பாடுகளை முன்வைத்து செயற்பட்டு வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பேசுவதனால் தனது நோக்கம் எதனையும் சிறிலங்கா அரசாங்கத்தால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இதுவே எம்மை அழைக்காமைக்கு காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment