இலங்கை அரசாங்கம் தான் ஏற்படுத்த திட்டமிட்டுள்ள உள்நாட்டு விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் பெரும்பான்மையாக இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையின் 29 வது அமர்வில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கம் நம்பகத்தன்மை, வெளிப்படையான நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றை உருவாக்கும் போது அதற்கான பொறிமுறை சர்வதேச பொறிமுறையாகவே அல்லது அந்த பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் பெரும்பான்மையாக இடம்பெறுவதையோ உறுதி செய்யவேண்டும்.
மேலும் இலங்கை அரசாங்கம் தனது உள்நாட்டு பொறிமுறையை உருவாக்கும்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேர்மையான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும், மேலும் இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கின்ற முக்கிய விடயங்களுக்கு தீர்வை காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் ஓத்துழைப்பேன் என்ற தனது வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்,அவர்கள் தங்களுக்கு தேவையான மேலதிக தகவல்களை பெறுவதற்கு அனுமதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment