புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் காவற்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவத்தை போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து காவற்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்தவர்களின் எண்ணிக்கை 120க்கும் அதிகமாகும். இப்படியான சம்பவங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது. இராணுவத்தில் இருப்பவர்களில் பலர் எனது நண்பர்கள்.
எனினும் அவர்கள் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும். இராணுவத்தினர் எமது காணிகளில் உள்ளனர். மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இது யாழ்ப்பாண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அழுத்தமாக காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 6 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற வீதத்தில் இராணுவத்தினர் இருக்கின்றனர்.
நீண்டகாலமாக ஒரு பிரதேசத்தில் இராணுவத்தை நிலை நிறுத்தி வைப்பதன் மூலம் பல்வேறு செயல்கள் நடக்கக் கூடும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். மதுபான பாவணை மற்றும் விநியோகம் அதிகரிக்கக் கூடும்.
விசேட நிபுணர்கள் இவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment