மருமகனுக்கு 150 ற்கும் மேற்பட்ட உணவு வகைகளைச் செய்து விருந்தளித்த மாமனாரும்...
அதே தேசத்தில் ஒரு நேரச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் அலையும் ஏழைகளும்.!!
தனது மருமகனுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்து அசத்த வேண்டுமென எண்ணிய மாமனார், வகை வகையான உணவு வகைகள் செய்து அசத்த வேண்டும் என்பதற்காக 150 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து மருகனை திக்குமுக்காட வைத்துள்ளார்.!!
இந்த விருந்தோம்பலானது, தனது மருமகன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசமும், மரியாதையுமாக இருக்கலாம்..! ஆனால், இதை அனைவராலும் ஜீரணித்துக்கொள்ள முடியாத விடயமாகும். காரணம், ஒரு மனிதனால் ஓரளவிற்கு மேல் விரும்பிய எதையும் உண்ண முடியாது. ஆகையினால், ஒரு மனிதனுக்கு தேவைக்கு அதிகமான ஒன்றையோ அல்லது உடனடியாக முழுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றையோ நாம் பரிசாகவோ அல்லது அன்பின் காரணமாகவோ வழங்குவது முட்டாள்தனமான ஒன்றாகும்!!!
அதுவும் உணவு விடயங்களில் நாம் மிச்சமாக்கி அதை பயன்படுத்த முடியாமல் வீணாக வீசுவது மனதிற்கு பாரமான ஒன்று. அவ்வாறு இருக்கையில் ஒருவருக்கு அளவிற்கு மீறிய உணவைப் படைத்து வீண் விரயமாக்குவது எவ்வளவு ஒரு மடத்தனமான செயலாகும்???
நமது நாட்டில் எத்தனை வறிய குடும்பங்கள் ஒரு நேர சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வயிற்றைப் பட்டினி போட்டு காய வைத்துக் கொண்டு அடுத்த நேர உணவிற்கு என்ன செய்வது என திண்டாடி அழுகையோடு தேடி வரும் நிலையிலும்... பசியோடு கதறும் குழந்தைக்கு அன்போடு அணைத்து பால் பருக்க மார்பினில் ஒரு சொட்டுத் துளி பால் கூட இல்லாமலும் எத்தனை ஏழைத் தாய்கள்... இன்றும் கண்ணீரோடு தெருவெல்லாம் அலைகிறார்கள்.???
அதே தேசத்தில் அதி மேதாவித்தனமாக 150 ற்கும் மேற்பட்ட வகை வகையான உணவு செய்து சாப்பிட முடியாத ஒருவருக்கு படைத்து, மீதமுள்ள 90 சதவீத உணவை வீண் விரயமாக்குவதை எப்படி ஜீரணித்துக்கொள்ள முடியும்???
உண்மையிலேயே ஏழைகளின் கண்ணீரையும், வறுமையின் வலிகளையும் இவர்கள் போன்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியுமா?
அளவிற்கு மீறிய உணவை, உண்ண முடியாத மருமகனுக்கு 150 வகையான உணவு வகைகள் படைத்து பெருமை கொள்வதை விட... அதே தெருவில் வறுமையின் பிடியில் சிக்கி ஒரு நேரச் சாப்பாட்டிற்காக வழியில்லாமல் அலையும் ஒரு ஏழைக் குடும்பத்திற்காக ஒரேயொரு வகையான உணவு கொடுத்தாலே... அந்த ஏழைகள் வயிறார உண்டு தெய்வமாக வணங்குவார்கள்..!
உண்மையான சந்தோசம் என்பது நாம் மட்டுமே பெற்று அனுபவிப்பது அல்ல.. மாறாக, இல்லாதவர்களுக்கு ஏதாவது ஓர் உதவி செய்து, அந்த உதவியினால் அவர்கள் அனுபவிக்கின்ற அளவற்ற சந்தோசத்தைப் பார்த்து நாமும் அவர்களோடு சேர்ந்து அனுபவிப்பதே உண்மையான... மேன்மையான சந்தோசமாகும்.
- வல்வை அகலினியன்.




No comments:
Post a Comment