April 10, 2015

தேர்தல் மறுசீரமைப்பு திருத்தத்தின் பின்னரே பாராளுமன்றம் கலைப்பு!


தேர்தல் முறைமை மாற்றத்தை 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்ததன் பின்னர் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன், 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் (தேர்தல் முறைமை மாற்றம்) ஒன்றாகவே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் சுதந்திரக் கட்சி எம்.பி. க்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.  

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி சிறிசேன தலைமையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 21 ஆம் திகதி மாலை வாக்கெடுப்புக்கு விடுவதென்றும் பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது திட்டமிடப்பட்டிருந்த நிலையிலேயே சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. க்கள் இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.