ராடா நிறுவனம், புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அதுதொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் புலிகளுக்கு உதவியோர் யாராக இருந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாது. அதற்கு நாம் ஒரு போதும் இடமளியோம் என்று அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
யாருடைய அச்சுறுத்தலுக்கும் நான் பயப்பிடமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர், அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ராடா நிறுவனம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவின் ஆட்சிகாலத்தில் அதாவது 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் தலைவர் டிரான் அலஸ் ஆவார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக எங்களுடைய இராணுவ வீரர்கள் மாண்டுகொண்டிருந்த நேரம் பயங்கரவாதிகளுக்கு 8,000 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையிலேயே முறைபாடு செய்துள்ளோம்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும். குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்று நானும் வாக்குமூலம் அளித்துள்ளேன். வாக்குமூலம் அளித்தமைக்காக யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.