இது நடந்து மூன்று கிழமைகள் கடந்திருந்தாலும் இன்னமும் அந்தக் கொடூர அனுபவத்தை இந்தக் குடும்பத்தினரால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு பாணிற்குள் எப்படி இப்படியான ஒரு விடயம் இருந்திருக்க முடியும் என்ற அதிர்ச்சி அவர்களிடம் இருந்து இன்னமும் நீங்கவில்லை.
இவர்கள் உட்கொண்ட பாணிற்குள் எலிவால் துண்டு ஒன்று கிடந்துள்ளது. இந்தப் பாணிணை உட்கொண்ட இந்தத் தம்பதிகளும் இரு பிள்ளைகளும் கடுமையான வயிற்று நோய்க்கு உள்ளாகி உள்ளனர். கடந்த மார்ச் 14ம் திகதி காலையில் பரிஸ் ஏழிலுள்ள Hasna Channouf எனும் குடும்பத்தலைவி, பாணைக் கடித்தபோது இந்த எலிவால் பாணிற்குள் இருந்துள்ளது.
«நான் கடித்தபோது முதலில் ஒரு கறுப்புப் புழுபோல்தான் தெரிந்தது. ஆனால் பாணை நான் இரண்டாகப் பிரித்தபோது தான் அதற்குள், எலியின் மலம், சிறு புழுக்கள், அதன் பின்னர் முழுதான ஒரு எலிவால் இருந்தது. எலிவாலின் உரோமங்கள் கூட அப்படியே இருந்தன» எனக் கண்களில் அதிர்ச்சி நீங்காமல் Hasna Channouf கூறினார்.
இந்தப் பாணின் மற்றப் பாதியை,முதல் நாள் இரவு சாப்பிட்ட கணவனும் பிள்ளைகளும் கடுமையான வயிற்று வலிக்கும் வயிற்றுப்போக்கிற்கும் ஆளாகி உள்ளனர்.
இந்தப் பாண் இவ்ரி-சூர்-சென்னில் உள்ள Carrefour இலேயே வாங்கப்பட்டிருந்தது. இந்த விடயங்கள் Carrefour நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான உள்ளக விசாரணையின் பின்னர், விளக்கத்தையும் நட்ட ஈட்டினையும் தாங்கள் வழங்கத் தயாராக உள்ளோம் என Carrefour நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment