April 09, 2015

நிலத்தடி நீரை பயன்படுத்தி வடமாகாணசபைக்கு எதிராக அரசியல்! முதலமைச்சர் குற்றச்சாட்டு!!

குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன் இது தொடர்பில் வடமாகாண சபை அசமந்தப் போக்கில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார். 

அவர்களுடைய நடவடிக்கைகள் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதை நோக்கிச் செல்லாது பிரச்சினைக்கான குற்றச்சாட்டினை எம் மீது முன்வைப்பதனை மையமாகக் கொண்டு நகர்ந்து செல்கின்றது. 

இவ்வாறான செய்கைகள் குடிநீர்ப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைப் பெற்றுத்தரப் பயன்படப் போவதில்லை என்பதுடன் பொதுமக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகின்ற ஒரு முயற்சியாகவே அமைந்துள்ளதாகவும் இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தெரிவித்தள்ளார்.

இதனிடையே சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பான போராட்டம் சர்ச்சைக்குரிய வகையினில் முடிவுறுத்தப்பட்டமை பல்வேறு தரப்புக்களிடையேயும் சந்தேகங்களினை தோற்றுவித்துள்ளது.இந்நிலையினில் ஏன் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டதென்பது பற்றி இன்று ஊடக அறிக்கையொன்றை  போராட்டகாரர்களும் விடுத்துள்ளனர். 

கோரிக்கை தொடர்பாக எம்மால் அணுகப்பட்ட முத்தரப்பினரதும் சாதகமான கூற்றுக்களைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு இப்பிரச்சினையில் உறுதியான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிறுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment