மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான MH17 விமானம், ரஷ்யாவின் பக் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு யூலை 17ம் திகதி, நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில்(Amsterdam) இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு(Kuala Lumpu) மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த MH17 ரக பயணிகள் விமானம் சென்றது.
ரஷ்ய எல்லை பகுதி அருகே உக்ரைனில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில், 15 விமான ஊழியர்கள் உட்பட பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர்.
MH17 விமான விபத்து குறித்து சர்வதேச விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து சில உலோக துண்டுகளை கண்டெடுத்துள்ளார்.
இந்த உலோக துண்டு, 3 சர்வதேச தடய வியல் நிபுணர்களிடம் சோதனை செய்ய கொடுக்கப்பட்டது.
இந்த உலோக துண்டுகள் ரஷ்யாவின் தரையில் இருந்து வானத்தில் தாக்கும் பக் (BUK) ஏவுகணை பாகங்களுடன் ஒத்துப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
