அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காணாமற் போனதாகக் கூறப்படும் தமிழ் இளைஞர், யுவதிகள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் முன்னாள் நீதிபதியும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ள கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயத்தில் உண்மையை காணாமற் போனவர்களின் உறவுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
ஆகவே, இரகசிய முகாம்கள் இலங்கையில் உள்ளனவா? அவை எங்கேயுள்ளன? அங்கு எத்தனை பேர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும் என்ற கேள்வியை காணாமற் போனவர்களின் உறவுகள் சார்பாக எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது பிரதமரிடம் முன்வைக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வருகைதரும் போது அவர்களை விமான நிலையத்திலேயே கைது செய்வதாகவும், விசாரணைக்கு உட்படுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையானது பாதுகாப்பான தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களிடையே அவநம்பிக்கையையும், அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலமாக இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் விசாரணைக்குட்படுத்தப்படுபவர்கள் தொடர்பான விபரங்களையும் தெரிந்து கொள்ள தமிழ் மக்கள் ஆவலாக உள்ளனர்.
எனவே தமிழ் மக்கள் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது இவ்விரண்டு கேள்விகளையும் பிரதமரிடம் முன்வைக்கவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment