| CV |
இந்நிகழ்வினில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரவணபவன்,சுரேஸ்பிறேமச்சந்திரன் என பலரும் குவிந்திருந்தனர்.
அங்கு பிரசன்னமாகியிருந்த அரச அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது உரையினில் வடக்கு மாகாண முதலமைச்சரின் வழியிலேயே நாங்களும் பின்தொடர்கின்றோமே தவிர எங்களுக்கு தரப்பட்ட அதிகாரங்களை தனிப்பட்ட முறையில் செலுத்த மாட்டோம் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பல ஆண்டுகளாக ஒரு அரசு மட்டுமே ஆட்சியில் இருந்தது. இதனால் எங்களால் பல சேவைகளை செய்ய முடியாது இருந்துள்ளது. தற்போது எங்களுக்கு ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. எனினும் சிறுபான்மையின மக்கள் தான் இந்த ஆட்சியை மாற்றியிருக்கின்றோம். 100 நாள் திட்டத்தின் ஊடாகவே இந்த ஆட்சி அமைந்துள்ளது.
கடந்த காலத்தில் இருந்த ஆட்சியினால் வேறு பல அமைச்சர்கள் இருந்தமையால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே வடக்கு மாகாணத்திலும் ஆட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் கூறுவது தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆட்சிமாற்றத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை. கடந்த தேர்தலில் எமது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்கு அமையவே வடக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியை மாற்றியிருக்கின்றார்கள். நாங்கள் முதலமைச்சரின் வழியில் தான் பின்தொடர்கின்றோமே தவிர எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செலுத்தவில்லை. நான் செலுத்தவும் மாட்டேனென தெரிவித்தார்.