வடமராட்சி, எள்ளங்குளம் பகுதியில் இன்று மாலை உதைபந்து விளையாடிக்கொ ண்டிருந்த வேளை பந்து இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளது. இதனை எடுப்பதற்காக இராணுவ முகாமுக்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே பகுதியைச் நேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜாஜெகன்(வயது- 29) என்பவரே இவ்வாறு
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:- வடமராட்சி எள்ளங்குளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்கள் குழு உதைபந்து விளையாடியுள்ளது.
இதன்போது அடித்த பந்து அருகிலிருந்த இராணுவ முகாமுக்குள் சென்றதால் அதை எடுப்பதற்காக ஜெகன் முகாமுக்குள் சென்றுள்ளார். இதன்போது அங்கு கடமையிலிருந்த இரு இராணுவத்தினர் குறித்த நபரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் இருந்து ஒருவாறு தப்பிய அவர் வீட்டுக்கு ஓடியுள்ளார். நண்பர்களும் ஓடித் தப்பிவிட்டனர். தனது மோட்டார் சைக்கிளை மைதானத்தில் நிறுத்தியிருந்த ஜெகன் அதை எடுக்க மீண்டும் சென்றுள்ளார். இதன்போது அவரை பிடித்த இராணுவத்தினர் சரமாரியாக மீண்டும் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. எனினும் இன்று இரவு வைத்தியசாலைக்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த நபரை மிரட்டியதுடன், பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெறவேண்டும் எனவும் எச்சரித்தனர் என்று தெரியவருகிறது.

No comments:
Post a Comment