விவசாயிகளுக்கு காப்புறுதிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்படுகின்ற பொழுது வங்கிகள் சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பான அறிக்கைகளை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் வங்கிகளின் முகாமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
விவசாயிகளுக்கு காப்புறுதிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கும்போது வங்கிகள் சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கடன் கொடுப்பனவின் போது ஏதேனும் தொகைகள் கழிக்கப்படுமாயின் அது தொடர்பான முழு விபரமும் விவசாயிகளுக்கு அறியத்தரப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பான அறிக்கைகளை விரைவில் எம்மிடம் சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள் சிரமங்களின்றி கடனுதவிகளை வழங்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்களும் கலந்துகொண்டு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள், விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
இக்கலந்துரையாடலில், அண்மையில் நடைபெற்ற விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவசாய அமைப்புக்களினால் வங்கிகள் மீது சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடை முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.